This article is from Jun 07, 2019

நீட் 2019 தேர்ச்சியில் வகுப்பு வாரியான தேர்ச்சி எண்ணிக்கை!

பரவிய செய்தி

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பட்டியல் இனத்தவர்கள் 20,009 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63,749 பேர், முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த 7,04,335 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3% உள்ள முன்னேறிய வகுப்பு பசங்களுக்கு 45% இடம், 60% உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடம், 37% உள்ள ஒடுக்கப்பட்டோருக்கு 13% இடம்.

மதிப்பீடு

சுருக்கம்

நீட் 2019 தேர்வின் முடிவு குறித்து செய்தியில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்ட 7 லட்சம் பேர் பொது பிரிவினர் மட்டும் அல்ல. 701-134 மதிப்பெண் அடிப்படையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து காண்போம்.

விளக்கம்

2019 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாகின.நாடு முழுவதிலும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி இருந்தனர். அதில், 7,97,042 பேர் தேர்ச்சி அடைந்து, தேர்ச்சி சதவீதம் 56.50% ஆக உள்ளது.

தமிழகத்தில் இருந்து சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருந்தனர். அதில், 59,785 பேர் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி சதவீதம் 48.47% ஆக உள்ளது. நாட்டில் தேர்ச்சி சதவீதத்தில் டெல்லி அதிகபட்சமாக 74.92% பெற்றனர்.

இந்நிலையில், வகுப்பு வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பட்டியல் இனத்தவர்கள் 20,009 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63,749 பேர், முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த 7,04,335 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3% உள்ள முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கு 45% இடம், 60% உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடம், 37% உள்ள ஒடுக்கப்பட்டோருக்கு 13% இடம் மட்டுமே கிடைத்து உள்ளதாக சன் நியூஸ் செய்தியில் வெளியாகியதை வைத்து மீம்களை பதிவிட்டனர்.

வகுப்பு வாரியாக தேர்ச்சி சதவீதம் குறித்து வெளியிட்ட தகவல் தவறானதாகும். ஏனெனில், 2019 நீட் தேர்விற்கு பொது பிரிவில்(UR) பதிவு செய்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 5,34,072 பேர் மட்டுமே. இப்படி அடிப்படையிலேயே தவறு இருப்பதை பார்க்க முடிகிறது.
(தேர்விற்கு வராமல் இருந்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையை அட்டவணையில் காண்க)

தேர்ச்சி எண்ணிக்கை :

வகுப்பு வாரியாக பார்க்கும் பொழுது, பொது பிரிவினரில்(UR) தேர்வு எழுதிய 4,99,884 பேரில் 2,86,245 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒ.பி.சி பிரிவில் தேர்வு எழுதிய 6,31,473 பேரில் 3,75,635 பேரும், எஸ்.சி பிரிவில் 99,890 பேரும், எஸ்.டி பிரிவில் 35,272 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏன் குழப்பம் ?

தேர்ச்சியானவர்களை மதிப்பெண் அடிப்படையில் பிரித்து பார்க்கையில், 50th Percentile எனும் 701-134-க்கு இடைப்பட்ட மதிப்பெண் பெற்றவர்கள் மொத்தம் 7,04,335 பேர் ஆவர். 40th Percentile எனும் 133-107-க்கு இடைப்பட்ட மதிப்பெண்ணை பெற்றவர்களில் ஒ.பி.சி பிரிவினர் 63,789 பேர், எஸ்.சி பிரிவினர் 20,009, எஸ்.டி பிரிவினர் 8,455 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இத்தகைய Percentile எனும் மதிப்பெண் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தேர்ச்சியானவர்களில் பிற(others) எனும் பிரிவில் 7,04,335 பேர் உள்ளனர். இதில், பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி,எஸ்.டி உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் அடங்கி உள்ளனர். அதனை அறியாமல், செய்தியில் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாக சன் நியூஸ் செய்தியில் தவறாக வெளியிட்டு உள்ளனர்.

National Testing Agency வெளியிட்ட பத்திரிகை வெளியீட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து செய்தியை தெளிவுப்படுத்தி உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை தவறாக புரிந்து கொண்டு முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே 7 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader