நீட் ரிட் மனு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி.. அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பாஜகவினர் !
பரவிய செய்தி
நீட் தேர்வு வழக்கு – ரிட் மனு வாபஸ். நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை திரும்ப பெற்றது தமிழக அரசு ரிட் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய அரசு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வந்தது. அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நீட் ரகசியத்தை ரிட் மனுவாக தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய உதவாக்கரை திமுக 😂😂… pic.twitter.com/mftH16nkhj
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) February 24, 2023
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த ரிட் மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டது எனத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நீதிபதி கேட்டதுக்கு நீட் ரத்து ரகசியத்தை சொல்ல முடியாது; வழக்கை வேணா வாபஸ் வாங்கிக்கறோம். சாரி ரகசியத்தை சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க pic.twitter.com/oLFn4xqRX0
— Savukku Shankar (@Veera284) February 24, 2023
மேலும், நீட் குறித்த ரிட் மனுவை திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொட்டு வாங்கியதாக பாஜக சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்வீட் செய்துள்ளார்.
உண்மை என்ன ?
நீட் தேர்வு குறித்த ரிட் மனு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவக் கூடிய செய்திகள் குறித்து பார்ப்பதற்கு முன்பாக, நீட் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக அரசுகள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளைப் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது.
2017ம் ஆண்டு ஒன்றிய அரசு மருத்துவ இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வைக் கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றியது. 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக அரசு இத்தேர்வுக்கு எதிராகச் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அம்மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கிடையில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “தங்களது கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அறிவித்தது.
இதற்கிடையில் அதிமுக அரசு 2020ம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் ‘ரிட் மனுவினை’ தாக்கல் செய்திருந்தது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 2021 செப்டம்பரில் அனுப்பப்பட்ட அந்த மசோதாவினை, 2022 பிப்ரவரி மாதம் ஆளுநரால் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மீண்டும் 2022, பிப்ரவரி 8ம் தேதி நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து நீட் தேர்வு குறித்த ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அதிமுக அரசு என்பது உறுதியாகிறது.
ரிட் மனு மற்றும் சூட் மனு வேறுபாடு என்ன ?
இது குறித்து யூடர்னிலிருந்து வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியது, ரிட் மனு என்பது உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு பிரிவு 32ன் கீழ் தொடரப்படுவது. அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது இம்மனு போடலாம். இதே போன்ற வழக்கின் பிரிவு 226ன் படி உயர் நீதிமன்றத்திலும் தொடரலாம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு (அதிமுக) நீட் தேர்வினால் மாணவர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்கிற முறையில் ரிட் மனுவாகத் தாக்கல் செய்தது.
ஆனால் நீட் தொடர்பாக ‘ஒரிஜினல் சூட்’ மனுவாகப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு பிரிவு 131ன் படி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அல்லது இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் சூட் மனுவாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதன்படி திமுக அரசு சூட் மனுவினை தாக்கல் செய்து, முந்தைய அரசு தாக்கல் செய்திருந்த ரிட் மனுவினை திரும்பப் பெறக் கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று நீதிபதியும் அனுமதி அளித்தார்.
இது குறித்த முழு செய்தியையும் குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு நீட் தொடர்பான ரிட் மனுவினை திரும்பப் பெற்றுக்கொள்ளக் கோரியுள்ளதாகப் பாதி செய்தியை மட்டும் தந்தி டிவி நியூஸ் கார்டாக வெளியிட்டிருந்தது.
அந்த நியூஸ் கார்டினை (முதலில் பதிவு செய்தது) தந்தி டிவி சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டது. ஆனால், அந்த நியூஸ் கார்டினைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.
பின்னர் இது குறித்து வேறொரு நியூஸ் கார்டினை பதிவிட்டு (இரண்டாவதாக பதிவு செய்தது) அதனையும் நீக்கியுள்ளது. இது குறித்து தந்தி டிவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
உண்மை இவ்வாறாக இருக்க, நீட் குறித்த ரிட் மனுவினை திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஒரு தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், நீட் குறித்த வழக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு இடையிலானது என்பதால், அதனை ஒரிஜினல் சூட் மனுவாகத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு ரிட் மனுவாகத் தாக்கல் செய்திருந்தது. இதனைச் சரி செய்வதற்காக திமுக அரசு சூட் மனுவைத் தாக்கல் செய்து, ரிட் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.