This article is from Aug 19, 2021

அரசு நியமித்த அர்ச்சகருக்கு ஒன்றுமே தெரியவில்லை என இந்து மக்கள் கட்சி பரப்பும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

ஏதோ டீக்கடையில் அடுப்புக்கு காண்பித்த மாதிரி இருக்கிறது. நடுநிலை இந்துக்களே இந்த பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுக அரசு நியமனம் செய்த புதிய அர்ச்சகருக்கு ஒன்றுமே தெரியவில்லை, அலங்காரம் செய்த பின் சுவாமி மேல் பால் அபிஷேகம் செய்கிறார், கற்பூரம் ஏற்றும் போது மந்திரம் கிடையாது என அர்ச்சகர் ஒருவர் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை மீது பால் அபிஷேகம் செய்யும் 55 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த வீடியோ இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முகநூல் உள்ளிட்டவையிலும் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. பதிவுகளின் கமெண்ட்களில், இவர் எதற்காக பூணூல் அணிந்து இருக்கிறார் என்கிற கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரத்தை யாரும் குறிப்பிடாத போது சிறு சந்தேகம் எழுந்தது. அடுத்ததாக, வைரல் வீடியோவில் பின்னணியில் ஒலிக்கும் பாடல் தமிழ் மொழியா அல்லது வேறு எந்த மொழியா என சந்தேகத்தை பெரிதாக்கியது.

ஆகையால், வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி Temple Connect எனும் முகநூல் பக்கத்தில் 55 நொடிகள் கொண்ட இதே வீடியோ வெளியாகி இருந்ததை அறிய முடிந்தது. 

Facebook link 

அந்த முகநூல் பதிவில், ” ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கணிப்பகம் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி கோவில் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : கார், பைக் கழுவுறவங்களா அர்ச்சகர் ஆக்கினால்… வைரலாகும் வன்ம பதிவுகள் !

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின் கீழ் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பும், வன்மப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பிரதானமாக இருக்கையில், அப்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகருக்கு கோவில் பணியில் ஒன்றுமே தெரியவில்லை எனக் கூறி பழைய வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : ஆகமத்தை, இறைவனை மதிக்கவில்லை! பழைய புகைப்படத்தை பகிர்ந்து பொங்கும் காயத்ரி ரகுராம்

முடிவு : 

நம் தேடலில், திமுக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகருக்கு கோவில் பூஜை பணி தெரியவில்லை, மந்திரம் தெரியவில்லை என பரப்பப்படும் வீடியோவில் இருப்பது தற்போது தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அர்ச்சகரே அல்ல, தமிழ்நாடே அல்ல.

வைரல் செய்யப்படும் வீடியோ கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திராவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் என முகநூலில் வெளியாகி இருக்கிறது என அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader