This article is from Aug 12, 2020

நியூசிலாந்து பிரதமர் கொரோனா இல்லாத நாடு என அறிவித்த பிறகு கோவிலுக்கு சென்றாரா ?

பரவிய செய்தி

நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று பிரகடப்படுத்திய உடனே இந்து கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு நேர்த்திகடன் செலுத்துகிறார்.

மதிப்பீடு

விளக்கம்

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டில் கொரோனா வழக்குகள் இல்லை என அறிவித்த பிறகு இந்து கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்தியதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Facebook link | archive link

உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஆகஸ்ட் 8-ம் தேதி ஜீ நியூஸ் இணையதளத்தில், ” நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தேசிய தேர்தலுக்கு முன்னதாக ராதா கிருஷ்ணன் கோவிலுக்கு வருகை தந்ததாக ” செய்தி வெளியாகி இருந்தது.

நியூசிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷி தன் ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஜசிந்தா ஆர்டெர்ன் ராதா கிருஷ்ணா கோவிலுக்கு வருகை தந்தது குறித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | archive link 

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று நடைமுறையில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஜூன் 8-ம் தேதி அறிவித்தார். அவர் ராதா கிருஷ்ணா கோவிலுக்கு சென்றது ஆகஸ்ட் 6-ம் தேதி. கொரோனாவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகே கோவிலுக்கு வந்துள்ளார்.

எனவே, ஜசிந்தாவின் கோவில் வருகைக்கும், கொரோனா அறிவிப்பிற்கும் தொடர்பில்லை என புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், அடுத்த மாதம் 18-ம் தேதி அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து கோவிலுக்கு வருகை தந்துள்ளார். 2018-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டின் 4-வது பெரிய சமுதாயம் இந்தியர்களே, 2.44 லட்சம் பேர் அங்கும் வாழ்கின்றனர். அதில், இந்துக்களின் எண்ணிக்கை 89,000 முதல் 1.23 லட்சத்திற்குள் உள்ளார்கள்.

102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகி உள்ளது. ஒக்கலன்ட் நகரத்தில் கோவிட்-19 தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக ஆகஸ்ட் 11-ம் தேதி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில் இருந்து, நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று பிரகடப்படுத்திய உடனே இந்து கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு நேர்த்திகடன் செலுத்துகிறார் எனக் கூறி வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தாவின் கோவில் வருகைக்கும், கொரோனாவிற்கும் தொடர்பில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader