சுகாதாரப் பணியாளர்களின் கொண்டாட்டம் எந்த நாட்டில் நிகழ்ந்தது ?
பரவிய செய்தி
நியூசிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளி குணமாகிய பிறகு மருத்துவர்கள் கொண்டாடிய தருணம். அந்த மருத்துவமனையின் கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
நியூசிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமாகிய பிறகு அங்கு பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் தங்களின் பாதுகாப்பு தொப்பியை தூக்கி வீசி கொண்டாடியதாகவும், அதன் பின்னர் மருத்துவமனை (கொரோனா வார்டு) மூடப்பட்டதாகவும் மேற்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1154 பேரில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர், 1132 பேர் குணமாகி உள்ளனர். கடந்த 20 நாட்களாக அந்நாட்டில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் கொரோனா இல்லாத நாடு என்றும், கட்டுப்பாடுகளை நீக்குவதாக அந்நாட்டின் அதிபர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தது ஜூன் 8-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
வைரலாகும் சுகாதாரப் பணியாளர்களின் கொண்டாட்ட வீடியோ குறித்து தேடிய பொழுது ” Matera News” எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ ஜூன் 5-ம் தேதி பதிவாகி இருந்தது. அதில், ” Matera ” என்கிற வார்த்தையைக் கொண்டு தேடிய பொழுது, அது இத்தாலியின் பஸ்லிகாடா மாகாணத்தில் உள்ள நகரம் என அறிய முடிந்தது. அதேபோல், பிற முகநூல் பக்கங்களிலும் அதே Matera-ல் உள்ள மருத்துவமனை எனக் குறிப்பிட்டதைக் காண முடிந்தது.
Matera-வில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குணமாகிய பிறகு அங்கு பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் அதனை கொண்டாடும் விதமாக வரிசையாக தலையில் இருந்த பாதுகாப்பு தொப்பியை வீசி செல்வதும், அதன் பின்னர் அந்த கொரோனா வார்டு மூடப்பட்டதும் நிகழ்ந்து உள்ளது. ஆனால், இந்த வீடியோ நியூசிலாந்து நாட்டில் எடுக்கப்பட்டதாக தவறாக பரவி வருகிறது. வைரல் வீடியோவிற்கும் நியூசிலாந்து நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.