நிர்மலா சீதாராமன் தமிழர்களைச் சிறுபான்மையினர் என்றதாகப் பரவும் போலிச் செய்தி

பரவிய செய்தி

பொங்கல் இந்தியப் பண்டிகை இல்லை. ஹிந்தி பேசுபவர்களை ஒப்பிட்டால், தமிழர்கள் சிறுபான்மையினர். பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமே, இந்தியப் பண்டிகை இல்லை. சிறுபான்மை மக்களின் பண்டிகைக்காக, இந்தியா முழுவதும் நடைபெறும் SBI வங்கித் தேர்வை வேறு தேதியில் வைக்க முடியாது. – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

எஸ்.பி.ஐ வங்கி பணியாளர் தேர்வு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளில் நடத்த தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் வங்கி தேர்வு வைக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரிக்கையும் போராட்டமும் நடத்தி வந்தனர். 

இந்த கோரிக்கைக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளதாகச் சாணக்கியா நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், இந்தி பேசுபவர்களுடன் ஒப்பிட்டால் தமிழர்கள் சிறுபான்மையினரே, பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமே, இந்தியப் பண்டிகை அல்ல. சிறுபான்மை மக்களின் பண்டிகைக்காக, இந்தியா முழுவதும் நடைபெறும் எஸ்.பி.ஐ வங்கித் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடியாது எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டினை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

நிர்மலா சீதாராமன் எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்துக் கூறியதாகப் பரவும் சாணக்கியா நியூஸ் கார்டும், தற்போது சாணக்கியா சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடும் நியூஸ் கார்டுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. சாணக்கியாவின் சமீபத்திய நியூஸ் கார்டுகளில் விளம்பரங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், பரவக் கூடிய நியூஸ் கார்டில் விளம்பரம் எதுவும் இல்லை.

மேலும், அந்த நியூஸ் கார்டில், 2023, ஜனவரி 16′ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கியாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேடியதில், அன்றைய தேதியில் அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடவில்லை. நிர்மலா சீதாராமன் டிவிட்டர் பக்கத்திலோ, செய்தி பக்கங்களிலோ இப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இதில் இருந்து இருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

SBI வங்கி தேர்வு : 

தமிழர் திருநாளான பொங்கலன்று (ஜனவரி 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை) எஸ்.பி.ஐ வங்கி எழுத்தர் (Clerk) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இத்தேதியை மாற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எஸ்.பி.ஐ வங்கியின் சென்னை வட்டாரத் தலைமையகத்தைக் கடந்த 13ம் தேதி முற்றுகையிட்டனர்.

Archive link 

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ‘தேர்வு தேதி வெளியிட்டபோதே அதனை மற்ற வலியுறுத்தி நிதியமைச்சகத்திற்கும், வங்கி தலைமை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன். ஆனால் தேதியை மாற்றவில்லை எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. சென்னை வட்டார தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட சில தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எந்தவித தெளிவான பதிலும் கூறாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எம்.பி.திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

Archive link

இந்நிலையில் வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 14ம் தேதி (12am), “SBI முதன்மை தேர்வுகளைத் தமிழர் திருநாளில் நடத்தக்கூடாதென 12 மணி நேர காத்திருப்பு போராட்டம். மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு ஒன்றிய நிதியமைச்சரோடு பேசியுள்ளார். நிர்மலா சீதாராமன் நாளை காலை தெரிவிப்பதாக பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முடிவை எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் தமிழரைச் சிறுபான்மையினர் என்றோ, பொங்கல் பண்டிகை தமிழருக்கு மட்டுமானது என்றோ எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. இருப்பினும், ஒன்றிய அரசு அறிவித்தபடி பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ. வங்கி தேர்வினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

முடிவு : 

நம் தேடலில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழர்களைச் சிறுபான்மையினர் என்றும், பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமே, இந்தியப் பண்டிகை இல்லை என்றும் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது எடிட் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader