2019-20 சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு 2-ம் இடம்.. ஸ்டாலின் காரணமெனப் பதிவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் !

பரவிய செய்தி

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதும் உள்ள சுகாதார நிலை மற்றும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனில் உள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்க நிதி ஆயோக் சுகாதாரக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது.

Twitter link  

இந்நிலையில், சுகாதாரத்தில் மாநிலங்களின் தரவரிசை அடங்கிய ” சுகாதாரமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா ” உடைய நான்காவது பதிப்பை டிசம்பர் 27-ம் தேதி நிதி ஆயோக் வெளியிட்டது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, சுகாதாரத்துறையில் ஒட்டுமொத்த செயல்திறனில் கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்தன. நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்தது குறித்து ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரிதாய் பேசப்பட்டது.

அது தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சுகாதாரத்தில் இரண்டாமிடம் பிடித்து உள்ளதாக பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரக் குறியீடு தற்போதைய ஆண்டிற்கானது அல்ல. இந்த சுகாதாரக் குறியீட்டை நிதி ஆயோக் வெளியிடும் போதே, அடிப்படை ஆண்டு 2018-19 முதல் குறிப்பு ஆண்டு 2019-2020 வரையில் மாநில சுகாதாரக் குறியீடு மதிப்பெண்கள் என்றே பதிவிட்டு இருக்கிறார்கள்.

Twitter link | Archive link

2019-20ல் சுகாதாரத்தில் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் தொடர்ந்து நான்காவது சுற்றிலும் கேரளா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதாக தரவரிசையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, ஒட்டுமொத்த செயல்திறனில் தெலங்கானா 3-ம் இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 4-ம் இடத்திலும், மகாராஷ்டிரா 5-ம் இடத்திலும், குஜராத் 6-ம் இடத்திலும்  உள்ளன. தென்னிந்திய மாநிலங்கள் சுகாதாரத்தில் சிறப்பாக இருப்பதாக அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

பெரிய மாநிலங்களில் சுகாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறனில் 30.57 மதிப்பெண்கள் உடன் உத்தரப் பிரதேசம்(19) இறுதி இடத்தைப் பிடித்து உள்ளது. எனினும், 2018-19ஐ ஒப்பிடுகையில் அதிகரிக்கும் செயல்திறனில் உத்தரப் பிரதேசம் 5.52 மதிப்பெண்கள் அதிகரித்து இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்து இருப்பதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டது தவறானது. நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரக் குறியீடு 2019-20 குறிப்பு ஆண்டிற்கானது என்றும், அப்போது அதிமுக ஆட்சி என்பதையும் அறிய முடிகிறது.  

Please complete the required fields.




Back to top button