மோடியின் ஆட்சி குறித்து நிதின் கட்காரி விமர்சித்ததாகப் பரவும் தவறான தகவல்!
பரவிய செய்தி
இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை. – மோடி அரசின் அமைச்சர் நிதின் கட்கரி
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேசிய 19 வினாடி வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர் ”இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை” எனப் பேசியதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
आज गांव, गरीब, मज़दूर और किसान दुखी हैं.
गावों में अच्छे रोड नहीं, पीने के लिए शुद्ध पानी नहीं, अच्छे अस्पताल नहीं, अच्छे स्कूल नहीं हैं.
– मोदी सरकार के मंत्री नितिन गडकरी pic.twitter.com/jt8AMfWOxU
— Congress (@INCIndia) March 1, 2024
உண்மை என்ன?
காங்கிரஸ் பதிவிட்டுள்ள நிதின் கட்காரியின் 19 வினாடி வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், ’TheLallantop’ என்னும் யூடியூப் பக்கத்தில் அவரது முழு நேர்காணல் கிடைக்கப்பெற்றது.
அதில், 17வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய வீடியோவில் உள்ள பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் அவர், ‘நமது நாட்டின் GDP-யில் விவசாயத்தின் பங்கு வெறும் 12%, உற்பத்தித் துறையின் பங்கு 22 – 24%, சேவைத் துறையின் பங்கு 52 – 54%. ஆனால், மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியுள்ளனர். காந்தி இருந்த போது 90 சதவீதம் மக்கள் கிராமங்களில் வசித்தார்கள். அதில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
காரணம் கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை. நிதானமான நிரந்தர வளர்ச்சி இல்லை. அதற்காக வளர்ச்சியே இல்லை என்று நான் சொல்லவில்லை. போதுமான வளர்ச்சி இல்லை என்று கூறுகிறேன். எங்களது அரசு வந்த பிறகு நாங்களும் நிறைய வளர்ச்சி திட்டங்களைச் செய்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
அதாவது முந்தைய காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் நடந்துள்ளது. ஆனால், அவை போதுமானதாக இல்லை. தற்போது நாங்கள் வந்த பிறகும் நிறைய வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம் என்றுதான் அவர் கூறுகிறார். அதில் ஒரு சிறு பகுதியைமட்டும் காங்கிரஸ் கட்சி தங்களது எக்ஸ் பக்கத்தில் தவறாக பொருள்கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ளது.
தான் பேசியதை தவறாக பரப்பியுள்ளதாக நிதின் கட்காரி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முடிவு :
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது கிராமங்களில் வளர்ச்சி இல்லை எனப் பேசியதாக காங்கிரஸ் கட்சி பதிவிட்ட தகவல் தவறானது. அவர் பேசியதின் சிறு பகுதியை மட்டும் தவறாக பொருள் கொள்ளும் வகையில் பதிவிட்டுள்ளனர்.