மசூதியை இடித்த உ.பி அரசு.. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதால் இடித்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !
பரவிய செய்தி
உபியில் மசூதி ஒன்றில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது யோகி ஜி அந்த கொடியை அகற்றம் முயன்ற போது மசூதி இடிந்து விட்டது.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப்பிரதேச மாநில பிரயாக்ராஜ் மாநகரில் உள்ள சைதாவாத்தில் மசூதி ஒன்றில் பாகிஸ்தான் கொடி பறந்ததையடுத்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அம்மசூதியை இடித்ததாக வீடியோ ஒன்றினை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்து இணையத்தில் தேடிய போது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷெர்ஷா சூரியின் ஆட்சி காலமான 1537 முதல் 1545-க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட ‘ஷாஹி மசூதி’ இடிக்கப்பட்டதாக 2023, ஜனவரி 9ம் தேதி ‘லைவ் இந்துஸ்தான்’ என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், கிராண்ட் டிரங்க் சாலை விரிவாக்கத்தையொட்டி வரலாற்று நினைவுச் சின்னத்தை இடிக்க அரசு நிர்வாகம் முடிவு செய்து இடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மசூதி இடிப்பு குறித்து இதற்கு முன்னதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு 2022, ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், நிலத்தின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் முடிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் நிலத்தின் உரிமைக்கான வழக்கு நிலுவையில் இருக்கும் போது உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித் துறை, காவல் துறையின் பாதுகாப்புடன் மசூதியை இடித்துள்ளதாக ‘டைனிக் பாஸ்கர்’ என்ற செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த மசூதியில் பாகிஸ்தான் கொடி இருந்ததாகப் பரப்பப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. பிறை நிலா, நட்சத்திரம் கொடியின் நிறம் போன்ற அம்சங்கள் பாகிஸ்தான் கொடி போலத் தோற்றம் அளிக்கலாம். உண்மையில் மசூதி மீது இருப்பது இஸ்லாமியக் கொடியாகும். இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதைக் காணலாம்.
இதேபோல், திமுக பிரச்சாரத்திலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அது குறித்த உண்மைத் தன்மையினை யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : திமுக பிரச்சாரத்தில் இருந்த முஸ்லீம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடியென வதந்தி !
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாகிஸ்தான் கொடி என வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், உத்திர பிரதேசத்தில் மசூதி ஒன்றில் பாகிஸ்தான் கொடி பறந்ததால் அம்மசூதியை யோகி ஆதித்யநாத் அரசு இடித்தாகப் பரவும் வீடியோ உடனான தகவல் உண்மை அல்ல. சாலை விரிவாக்கத்திற்காக அம்மசூதி இடிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.