வடமாநில தொழிலாளர்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி

வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் எனப் பல போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Twitter link | Archive link 

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக இந்தி செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன ?

தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாகப் பரவும் புகைப்படத்தைக் குறித்து இணையத்தில் தேடினோம். எந்த ஊடகத்திலும் அத்தகைய செய்திகள் வெளியாகவில்லை. 

பரவக் கூடிய புகைப்படத்தில் ‘News Banner Maker’ என வாட்டர் மார்க் (Water Mark) இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடியதில் அது ஒரு செல்போன் செயலி என்பதை அறிய முடிந்தது. 

இந்த செயலி மூலம் 100ம் மேற்பட்ட வடிவங்களில் 30 வினாடிகளுக்குள் செய்திகளை உருவாக்க முடியும் என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயலியைக் கொண்டுதான் தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாக ஒரு தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் எனப் போலி செய்திகளும் வீடியோக்களும் பரவ தொடங்கிய போதே, அது குறித்து தமிழ்நாடு காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பரவக் கூடிய பொய் செய்திகள் குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் தமிழ்நாடு காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும், பரவக் கூடிய வதந்திகள் மற்றும்  வடமாநில தொழிலாளர்களில் பாதுகாப்பு குறித்துக்  காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வர காரணம் என்ன ?

திருப்பூர் காவல் துறை வடமாநில தொழிலாளர்களுக்கு என பிரத்யேக உதவி மையம் அமைத்து தொலைப்பேசி எண் வெளியிட்டுள்ளது. தொழிலாளர்களில் பாதுகாப்பு மட்டுமின்றி வதந்தி பரப்புபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் கொல்லப்படுவதாகப் பரவும் வேறு சில வதந்தி வீடியோக்கள் !

முடிவு : 

நம் தேடலில், வடமாநில தொழிலாளர்களை மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேறக் கூறியதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அது செல்போன் செயலி மூலம் உருவாக்கப்பட்ட போலி செய்தி என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader