கர்நாடகாவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எனத் தவறாகப் பரப்பப்படும் சுயேட்சை வேட்பாளரின் புகைப்படம் !
பரவிய செய்தி
எத்தனை ஒட்டு கிடைத்தது ? டெப்பாசிட் கிடைத்தாதா ? தெரிந்தவர்கள் சொல்லுங்க..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணியிலிருந்தே பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கார்நாடக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு எத்தனை ஒட்டுகள் கிடைத்தது ? டெபாசிட் கிடைத்ததா ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்? என்பது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
மேலும் பகிரப்படும் புகைப்படத்தில் ஒரு பெண் வேட்பாளர் ஓட்டு கேட்பது போன்றும், அருகில் அவருடைய சின்னம் இரட்டைக் கரும்பு கொண்ட விவசாயி சின்னமாக இருப்பது போன்றும் உள்ளது. இந்த சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
https://twitter.com/krishnaskyblue/status/1657253742897659904
https://twitter.com/ASHOK25539881/status/1657258130382929923
உண்மை என்ன?
பகிரப்படும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், இது கடந்த மாதத்திலிருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.
https://twitter.com/JSKGopi/status/1652558768134303744
மேற்காணும் புகைப்படத்தில் கன்னட மொழியில் உள்ள வார்த்தைகளை மொழிப்பெயர்ப்பு செய்து பார்க்கையில் அதில் எந்த கட்சியின் பெயர்களும் இல்லை.
மேலும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர் ரூபா குறித்து தேடியதில், அவர் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள தேவதுர்கா (எண். 56) தொகுதியின் வேட்பாளராக 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பதை அவர் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் அவர் குறித்து ஆய்வு செய்து பார்த்தலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் இவர் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியையும் சார்ந்தவர் இல்லை என்பதையும், தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள விவசாயி சின்னத்தில் தான் இவர் போட்டியிட்டுள்ளார் என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
கூடுதல் தகவலாக தேவதுர்கா (எண். 56) தொகுதியில் தற்போது நடந்து வரும் வாக்குப்பதிவு எண்ணிக்கையின் 19 வது சுற்றின் முடிவின்படி இவர் 2781 வாக்குகளை பெற்றுள்ளார்.
முடிவு:
நம் தேடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெண் வேட்பாளர் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்றும் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இவர் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள தேவதுர்கா (எண். 56) தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் என்பதையும் அறிய முடிகிறது.