சிறந்த பஞ்சாயத்தாக விளங்கிய ஓடந்துறையின் முன்னாள் தலைவர் தோல்வி!
பரவிய செய்தி
850 வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பஞ்சாயத்து விருது வாங்கிய ஓடந்துறை சன்முகம் திமுக வேட்பாளரிடம் தோல்வி.
மதிப்பீடு
விளக்கம்
கோவை ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய திரு.சண்முகம் 2019 உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1996-ம் ஆண்டில் தொடங்கி 2006 வரைக்கும் ஓடத்துறையின் பஞ்சாயத்துத் தலைவரான திரு.சண்முகம் இருந்துள்ளார். அதன்பின், ஓடந்துறை பஞ்சாயத்து பெண்களுக்காக ஒதுக்கியதால் 2006-ல் இருந்து அவரின் மனைவி லிங்கம்மாள் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.
அதிமுக கட்சியைச் சேர்ந்தவரான சண்முகம் 2019 உள்ளாட்சித் தேர்தலில் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு உள்ளார். அவரை எதிர்த்து தங்கவேல், சிரிஸ் கந்தராஜா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் சண்முகம் முன்னிலையில் இருந்தார். ஆனால், இறுதியில் 53 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேல் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
தங்கவேல் 1,409 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சண்முகம் 1,356 வாக்குகளும், சிரிஸ் கந்தராஜா 159 , ராதாகிருஷ்ணன் 45 வாக்குகள் பெற்று இருந்தனர். இம்முறை ஓடந்துறை பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற தங்கவேல், முன்னாள் தலைவர் சண்முகத்தின் பெரியப்பா மகன் என்றும், அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி என தேர்தலுக்கு முன்பே செய்திகளில் வெளியாகி இருந்தது.
திரு.சண்முகம் ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்த காலக்கட்டத்தில் ராஜீவ் காந்தி தேசிய குடிநீர் திட்டத்தை முதன் முதலாக நடைமுறைப்படுத்தினார். ஊராட்சி பகுதிக்கு நிரந்தர வருமானம் கொண்டு வரவும், மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவும் அப்பகுதியில் காற்றாலை அமைத்தார். சண்முகம்-லிங்கம்மாள் பதவி காலத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டு 250 வீடுகள், பசுமை திட்டத்தின் கீழ் 101 தொகுப்பு வீடுகள் என 850 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.
சிறந்த ஊராட்சி பகுதியாக விளங்கிய ஓடந்துறை கிராமம் மத்திய, மாநில விருதுகள் பலவற்றை பெற்றுள்ளது. உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றது. ஓடந்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து திரு.சண்முகம் நிகழ்த்தி காட்டிய மாற்றங்கள் பல செய்திகளில், மேடைகளில் பெரிதாய் பேசப்பட்டது.
இருப்பினும், சுயேட்சையாக போட்டியிட்ட சண்முகம் தோல்வியை சந்தித்து உள்ளார். சண்முகம் மற்றும் தங்கவேல் ஆகிய இருவரின் வேட்புமனுவில் சுயேட்சையாக நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செய்திகளில் சண்முகம் அதிமுக சார்பிலும் மற்றும் தங்கவேல் திமுக சார்பிலும் நின்றதாக வெளியாகி இருக்கிறது.