தென்மாநில அரசு பள்ளியில் மதிய உணவின் தரம் என வடஇந்தியாவில் பரப்பப்படும் பொய் !
பரவிய செய்தி
தென்னிந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். அரிசி மற்றும் மஞ்சள் தண்ணீர் மட்டுமே.
மதிப்பீடு
விளக்கம்
நிதி பகிர்வில் தென்மாநிலங்கள் வஞ்சிகப்படுவதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்கள் முழுவதும் பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், தென்மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு எப்படி வழங்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். அங்கு உணவாக அரிசி மற்றும் மஞ்சள் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறி 1:42 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் இந்தி மொழியில் வட இந்தியா முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், மாணவர்கள் வரிசையாக நின்று தட்டில் சாதம் வாங்குவதையும், மிகவும் தண்ணியாக உள்ள குழம்பை ஒருவர் மாணவர்களின் தட்டுகளில் ஊற்றுவதையும் அதில் தெளிவாகக் காண முடிகிறது.
@nsitharaman : please take up with the state or Stop mid day meal program payment https://t.co/HnIMGOdarZ
— uttam mishra (@uttamprithvi) February 7, 2024
स्कूल पर कारवाई जल्द से जल्द होना चाहिए https://t.co/MBsfKQ5iOb
— Manish abhimanyu (@MmmNnn94701604) February 8, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தென்னிந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதன் முழு வீடியோ, பிப்ரவரி 01 அன்று ஒடிசாவைச் சேர்ந்த Bigul Tv என்ற யூடியூப் பக்கத்தில் “மதிய சாப்பாடு இப்படித்தான், பதினான்கு பேரின் ஐந்து ஆட்சிமுறையில் யாரும் இப்படி பருப்பு சாப்பிட்டிருக்க மாட்டார்கள், இது முடியுமா?” என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
அதில் வீடியோ எடுக்கும் நபர் ஒடியா மொழியில் பேசுவதை தெளிவாக கேட்க முடிகிறது. மேலும் அதில், “புகார் செய்ய நான் இங்கு வரவில்லை, ஆனால் என்ன வகையான பருப்பு வழங்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன் “என்று அங்கு வேலை செய்யும் சமையல்காரர்களிடம் வீடியோ எடுப்பவர் பேசுகிறார்.
பின்பு, “இவை பருப்பு வகைகள் அல்ல, நீங்கள் பரிமாறும் தண்ணீர் தான் இது. நீங்கள் குறைந்த அளவு உணவுப் பொருட்களைப் பெற்றுள்ளதால் தான், நீங்கள் இங்கு இவ்வாறு சமையல் வேலை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் BDO (Block Development Officer) அதிகாரியிடம் சென்று இதைப் பற்றி புகார் செய்வேன்.” என்றும் ஒடியா மொழியில் அவர் அந்த வீடியோவில் பேசுவதை கேட்க முடிகிறது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ ஒரிசா மாநில அரசுப் பள்ளியில், மதிய உணவு வழங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது. இது தென்னிந்தியப் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பரவி வரும் தகவல்கள் தவறானவை.
மேலும் படிக்க: பரமக்குடியில் காலை உணவு சாப்பிட்டதால் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனப் பரவும் தவறான செய்தி !
இதற்கு முன்பும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் உணவு குறித்து பல செய்திகள் தவறாகப் பரப்பப்பட்டன. அதுகுறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: உத்திர பிரதேச அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு எனப் பரப்பப்படும் பொய்
முடிவு:
நம் தேடலில், தென்னிந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் அரிசி சாதம் மற்றும் மஞ்சள் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறி பரப்பப்படும் வீடியோ ஒடிசாவைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.