ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த இஸ்கான் கோவிலை மசூதி என வதந்தி பரப்பிய வலதுசாரிகள் !
பரவிய செய்தி
சும்மா சொல்கிறேன். நேற்று வெள்ளிக்கிழமை
மதிப்பீடு
விளக்கம்
ஒடிசா மாநிலம் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Yesterday was Friday. pic.twitter.com/PVNjaa1Tt6
— Saurav Sanatani🚩 (@Saurav50321035) June 3, 2023
இந்த விபத்து நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருக்கும் கட்டடம் ஒன்றினை குறிப்பிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை என சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகள் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, இஸ்லாமியர்களின் மசூதி ஆனது இரயிலின் இருப்புப்பாதைக்கு அருகில் இருப்பதாகவும், அவர்களே இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் என்பது போலவும் புகைப்படம் ஒன்றினை பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், மசூதி எனப் பரவக் கூடிய படம் இருக்கிறதா என்பது குறித்துத் தேடினோம். ஜூன் 3ம் தேதி ‘Reuters’ இணையதளத்தில் விபத்து நடந்த இடத்தில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளனர்.
இதேபோல் ‘நியூஸ் 18 இந்தி’ தனது யூடியூப் பக்கத்தில் விபத்து நடந்த இடத்தில் ட்ரோன் உதவியுடன் எடுத்த வீடியோவினை பதிவிட்டுள்ளது. இவை இரண்டிலும் மசூதி எனப் பரவக் கூடிய கட்டடத்தினை பார்க்க முடிகிறது. ஆனால், அக்கட்டடம் மசூதி வடிவமைப்பில் இல்லை.
எனவே, மேற்கொண்டு அக்கட்டடம் குறித்து கூகுள் மேப்பில் தேடியதில், அது ‘பஹ்நாகா இஸ்கான் கோயில்’ (Bahanaga Iskcon Temple) எனும் இந்து கோயில் என்பதை அறிய முடிந்தது. அக்கோயிலின் கட்டடம் மற்றும் சிலைகளின் புகைப்படங்களும் இணையத்தில் உள்ளன. இக்கோயிலில் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ‘ISKCON ODISHA’ என்னும் யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து ஒடிசா காவல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில், இரயில் விபத்துக்குச் சிலர் மத அடையாளம் பூசுகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
We appeal to all concerned to desist from circulating such false and ill-motivated posts. Severe legal action will be initiated against those who are trying to create communal disharmony by spreading rumours.
— Odisha Police (@odisha_police) June 4, 2023
இவற்றைக் கொண்டு பார்க்கையில் அந்த கட்டடம் மசூதி அல்ல, இந்து கோயில் என்பதை அறிய முடிகிறது. மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு மதச்சாயம் பூச வேண்டாம் என காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை முஸ்லீம்கள் கொலை செய்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
இஸ்லாமியர்கள் குறித்து பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : ஒடிசா இரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என பழைய புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !
முடிவு :
நம் தேடலில், ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மசூதி இருப்பதாகப் பரவும் புகைப்படமும் தகவலும் உண்மை அல்ல. அது பஹ்நாகா இஸ்கான் என்னும் இந்து கோயில் என்பதை அறிய முடிகிறது.