ஒடிசா இரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என பழைய புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !

பரவிய செய்தி

ஒடிசா பாலாசோர் இரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள். அப்பகுதி RSS மாவட்ட இணை அமைப்பாளர் திரு.விஷ்ணு தலைமையில் 25 ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோரமண்டல் இரயிலில் பயணித்தவர்கள் உறவினர் அவசர தகவலுக்கு திரு.விஷ்ணுவை அனுகவும் – 94398 61204. Also, Railway Emergency Control Room Number of Balasore – 06782262286 !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

டிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒரே பாதையில் வந்ததால் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் களத்தில் உதவி வருவதாக தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா இப்புகைப்படத்தை பதிவிட்டு உதவி தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுமாறு பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?

எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அந்த புகைப்படம் கடந்த 2018ம் ஆண்டு Friends of RSS எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது.

Twitter link 

மேலும், 2015ம் ஆண்டு Shreeharsha Perla எனும் ட்விட்டர் பக்கத்தில் ஆனேக்கல் இரயில் விபத்து எனக் குறிப்பிட்டு இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link

2015 பிப்ரவரி 14ம் தேதி கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் நிகழ்ந்த இரயில் விபத்து தொடர்பாக டவ்ன் எனும் செய்தி தளம் வெளியிட்ட கட்டுரையில் அதே ரயிலின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. மேலும், 2015 பிப்ரவரி 14ம் தேதி samvada.org எனும் இணையதளத்தில் ஆனேக்கல் இரயில் விபத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாக இப்படத்தை பதிவிட்டு உள்ளனர்.

ஒடிசா விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் 20/25 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் செல்வதாக மேற்கு வங்கம் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாக ஜூன் 2ம் தேதி uniindia எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில் இடம்பெற்றுள்ள உதவி எண்ணை எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், ஒடிசா இரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செல்வதாக மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறி இருக்கிறார். ஆனால், களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட புகைப்படம் ஒடிசா அல்ல, அது 2015ல் கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் இரயில் விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிகிறது

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader