திமுக அரசு மூதாட்டிக்கு உதவித் தொகையை நிறுத்தியதாக பழைய செய்தியை பரப்பிய சவுக்கு சங்கர் !

பரவிய செய்தி

உங்கள் கைகளில் இரத்தக் கறை படியும் தமிழ்நாடு முதலமைச்சர் !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு அரசை குறிப்பிட்டு, துண்டு செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளார். “6 மாதமாக அலைகிறேன்” எனத் தலைப்பிட்ட அந்த செய்தியில், சிவகாசியைச் சேர்ந்த புஷ்பம் என்ற மூதாட்டிக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை கடந்த 7 மாதமாகக் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Archive link 

மேலும், “எனக்கு 83 வயதாகிறது. சிவகாசி போஸ் காலனியில் வசித்து வருகிறேன். என் கணவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிறது. மகள்கள், மகன் திருமணம் முடிந்து ஒதுங்கி விட்டார்கள். கடந்த 7 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை பெற்று வந்தேன். கடந்த 7 மாதங்களாக உதவித் தொகை வரவில்லை. ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. தற்போது மகன் வீட்டில் மாடிப்படிக்கு கீழே தங்கி வருகிறேன். இதற்கு ரூ.1000 கொடுத்ததால் சோறு போட்டார்கள். தற்போது சாப்பிட வழியில்லாமல் தவிக்கிறேன்.

6 மாதங்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். விசாரிக்கிறேன் என கூறினார்கள். இன்னும் விசாரிக்கிறார்கள். அதனால் தான் மீண்டும் மனு கொடுக்க வந்துள்ளேன்” என மூதாட்டி கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்புகைப்படத்தை பாஜக, அமமுக-வை சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை என்ன ? 

சவுக்கு சங்கர் உட்படப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியதில், 2021ம் ஆண்டும் இதே செய்தியைப் பலரும் பரப்பியுள்ளதைக் காண முடிந்தது.

மேலும், இச்செய்தி குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளதைக் காண முடிந்தது. அப்பதிவில், 2018ம் ஆண்டு வெளியான செய்தியை 2021ல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அப்போதே இது குறித்து விசாரிக்கப்பட்டது. இதனைப் பரப்புவதை நிறுத்துங்கள் எனப் பதிவிட்டு சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Archive link 

அதில், சிவகாசி தனி வட்டாட்சியர் ஆனந்தராஜ் 2021, நவம்பர் 25ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம் உள்ளது. அக்கடிதத்தில், ‘2018, ஜூலை 17ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியான மூதாட்டி புஷ்பம், முதியோர் உதவித்தொகை குறித்து அன்றைய தேதியிலேயே விசாரணை  செய்யப்பட்டது. அவர் முதியோர் உதவித்தொகை பெறத் தகுதியான நபர் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டது. 

இதே செய்தி மீண்டும் 2021, நவம்பர் மாதம் பரவியதைத் தொடர்ந்து மறுபடியும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘புஷ்பம் தனது மகன் சண்முக கணேசன் என்பவருடன் வசித்து வருகிறார். அவர் புத்தக அட்டை தயாரிக்கும் தொழிலை ஒப்பந்தம் அடிப்படையில் செய்து பொருளாதார நிலையில் வசதியாக உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், தினமலர் செய்தி கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளத்தில் பரவி தங்களின் மனதைப் புண்படுத்தி வருவதாகவும், தனது தாயாரை நல்ல முறையில் தான் பாதுகாத்து வருவதாகவும், அவருக்கு முதியோர் உதவித்தொகை தேவையில்லை எனவும் சண்முக கணேசன் அளித்த வாக்குமூலம் குறித்தும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு எழுதிய வாக்குமூல கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, இச்சம்பவம் 2018ல் நடைபெற்றது என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

முடிவு : 

நம் தேடலில், கடந்த 7 மாதமாக மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை எனச் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள புகைப்படம் 2018ம் ஆண்டு நடந்த நிகழ்வாகும். மேலும், தனது தாய்க்கு உதவித்தொகை வேண்டாம் என அவரது மகனே எழுத்துப் பூர்வமாக 2021ல் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader