பாரத் மாதா கி ஜெ என முழக்கமிட்டதால் முதியவரை இஸ்லாமியர்கள் தாக்கியதாகப் பரவும் வதந்தி !
பரவிய செய்தி
” பாரத் மாதா கீ ஜே ” என்று முழங்கியாதின் விளைவு, முஸ்லிம் இளைஞர்களின் வெறியாட்டம். இதுதான் தீவிரவாதம் நாளை நமக்கும் இதே நிலைதான்.
மதிப்பீடு
விளக்கம்
முதியவர் ஒருவர் பொது வெளியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என முழக்கமிட்டதால் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் எனக் கூறி 1 நிமிடம் 45 வினாடி கொண்ட வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
” பாரத் மாதா கீ ஜே ” என்று முழங்கியாதின் விளைவு, முஸ்லிம் இளைஞர்களின் வெறியாட்டம். இதுதான் தீவிரவாதம். நாளை நமக்கும் இதே நிலைதான்.😡😭
இது எங்கே, எப்போ நடந்தது? pic.twitter.com/0e3Ta5xask— Maha Simha (@maha_simha) October 12, 2023
உண்மை என்ன ?
முதியவர் தாக்கப்படும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், 2019, அக்டோபர் மாதம் ஹோட்சந்த் சிந்தி (Hothchand Sindhi) என்பவர் பொது வெளியில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை என்பதை அறிய முடிந்தது.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்னும் பகுதியில் உள்ள ஆசாத் சௌக் என்னும் இடத்தில் நடந்ததாக வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவினை ஒருவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரச்சனைக்குப் பிறகு மயங்கி இருக்கும் முதியவரைக் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்றுவதைக் காண முடிகிறது. மேலும் அதில் ‘Lady Bag Shopee’ என்ற கடையின் பெயரையும் பார்க்க முடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில் அப்பகுதி ராஜஸ்தானில் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் இதுகுறித்து தேடியதில், பாஜகவைச் சேர்ந்த ‘மஞ்சிந்தர் சிங் சிர்சா’ (Manjinder Singh Sirsa) என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அச்சம்பவத்தின் முழு வீடியோவினை பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் அம்முதியவர் பாஜக குறித்துத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார். பிறகு பாரத் மாதாகி ஜெ என முழக்கமிடுகிறார்.
இந்த வீடியோ குறித்த மஞ்சிந்தர் சிங்கின் பதிவில் ‘ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள ஆசாத் சவுக் சந்தையில் முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்’ என்று ராஜஸ்தான் காவல்துறையினரை டாக் செய்துள்ளார்.
மேலும் 2019, அக்டோபர் 21ம் தேதி அவரது டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த சம்பவம் 15.10.2019 அன்று பில்வாரா பகுதியில் நடந்தது. இதில் ஹோட்சந்த் என்ற முதியவர் பாதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் முல்லா சிந்தி (39), ஹேமந்த் ராம்சந்திர நதானி (45), பகவான் தாஸ் சிந்தி (37), மஞ்சூர் ஷேக் (31), மற்றும் இர்பான் ஷேக் (34) எனக் காவல்துறை அறிக்கையைப் பதிவு செய்துள்ளார்.
Hope this report will clarify pic.twitter.com/lSbTRO0gV1
— Manjinder Singh Sirsa (@mssirsa) October 20, 2019
அதுமட்டுமின்றி தாக்குதலுக்கு உள்ளான முதியவர் ஹோட்சந்த் தன்னை கடந்து செல்பவர்களை வம்பிழுத்ததும், இதற்கு முன்னர் அவரது மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறையிலிருந்ததும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பரவக் கூடிய இதே வீடியோ 2019ம் ஆண்டு பரவிய போது, இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) நகலை vishvasnews இணையதளம் பெற்றுள்ளது. அதிலும் முதியவர் ‘பாரத் மாதாகி ஜெ’ எனக் கூறியதால் தாக்கப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், தாக்கியவர்களில் முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதை அவர்களின் பெயரைக் கொண்டு அறிய முடிகிறது.
மேலும் படிக்க : முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !
மேலும் படிக்க : கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெண்ணை முஸ்லீம்கள் கொலை செய்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், பாரத் மாதா கி ஜெ என முழக்கமிட்டதால் முதியவர் இஸ்லாமிய இளைஞர்கள் தாக்கியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் பொது வெளியில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி பிறரை வம்பிழுத்ததையடுத்து அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்களில் இஸ்லாமியர் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.