இந்தியா கூட்டணியின் பீகார் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகப் பரவும் பழைய புகைப்படம்!

பரவிய செய்தி

பீகாரில் ராகுல் காந்திக்கு கூடிய கூட்டம் 

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவிற்கு எதிராகப் பல கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளது. அக்கூட்டணியின் சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பீகாரில் பேரணி ஒன்றை நடத்தியது. அதில், கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனப் புகைப்படம் ஒன்றை திமுகவைச் சேர்ந்த சல்மா, ராஜீவ் காந்தி முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

 Archive link 

 Archive link 

உண்மை என்ன?

பரவக் கூடிய படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அதே படத்தை 2017, ஆகஸ்ட் 27ம் தேதி  ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் லாலு பிரசாத் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், காந்தி மைதானம் – பாட்னா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு அப்படம் குறித்துத் தேடியதில் ’ஷம்ஷீர் அகமது’ (Shamsheer Ahmed) அவரது பேஸ்புக் பக்கத்தில் 2017, ஆகஸ்ட் 28ம் தேதி இதே போன்ற படம் ஒன்றைப் பதிவிட்டு இருப்பதைக்  காண முடிந்தது.

மேலும் ‘ANI’ அவர்களது எக்ஸ் பக்கத்திலும் அப்படத்தை பதிவிட்டுள்ளது. இப்படங்கள்  பாஜகவிற்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2017ம் ஆண்டு நடத்திய பேரணியில் எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை விட அதிகப்படியாக இருப்பது போன்று போலியாக எடிட் செய்யப்பட்ட படத்தைத்தான் லாலு பிரசாத் பதிவிட்டுள்ளார். இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது ANI வெளியிட்ட படத்தில் மைதானத்தில் மரங்கள் இருப்பதும் லாலு பிரசாத் பதிவிட்ட படத்தில் அம்மரங்கள் இன்றி மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் இருப்பதையும் காண முடிகிறது. 

அப்படி 2017ம் ஆண்டு எடிட் செய்யப்பட்ட அப்படத்தினைதான் தற்போது இந்தியா கூட்டணியின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது எனத் தவறாகப் பரப்புகின்றனர். 

2017ம் ஆண்டு பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ’Getty Images’ தளத்திலும் உள்ளது. அதில் பரவக் கூடிய படமும் இடம்பெற்றுள்ளது. 

முடிவு : 

இந்தியா கூட்டணி சார்பில் பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2017ம் ஆண்டு பாஜகவிற்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader