மம்தா பானர்ஜிக்கு அடிபட்டது ஒரு இடம், கட்டு போட்டிருப்பது ஒரு இடம் எனப் பரவும் பழைய புகைப்படம் !
பரவிய செய்தி
ஒரே குழப்பமாத் தான் இருக்கு அடி பட்டது ஒரு இடம் ஒட்டு போட்டது வேறு இடம் ஏன் ?? ஒருவேளை எடிட்டிங்கா இருக்குமோ???
மதிப்பீடு
விளக்கம்
மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி மார்ச் 14 அன்று தனது வீட்டில் கீழே விழுந்ததால், அவரது நெற்றி மற்றும் மூக்கில் பலமாக அடிபட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனை படுக்கையில் நெற்றியில் அடிபட்ட இரத்தக்காயத்துடன் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில் அவருக்கு நெற்றியில் அடிபட்டது ஒரு இடம், ஆனால் அவருக்கு நெற்றியில் கட்டு போடப்பட்டிருப்பது வேறு இடம் எனக் கூறி இரண்டு புகைப்படங்களை ஒப்பீடு செய்து சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
யாருடா அந்த மேக்கப் ஆர்டிஸ்ட்…ஆஸ்கார் அவார்டு ஒன்னை குடுங்கடா… https://t.co/VNPZLO0uB7
— URC (@RaviasmU) March 17, 2024
உண்மை என்ன?
மம்தா பானர்ஜி கட்டுப்போட்டிருப்பது போன்று பரவும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
India Today ஜனவரி 24 அன்றே பரவி வரும் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு “கார் விபத்தில் படுகாயம் அடைந்த மம்தா பானர்ஜி, ‘நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்…’” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதன்கிழமை (ஜனவரி 17) பர்தமானில் இருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பும் போது சிறிய கார் விபத்தில் காயமடைந்தார்.
மோசமான வானிலையில் மம்தா பானர்ஜி காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வாகனத்துக்கு முன்னால் ஒரு கார் திடீரென வந்தது, இதனால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார், இதனால் முதல்வர் காயமடைந்தார். திரிணாமுல் தலைவரின் தலையில் சிறு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு கொண்டு வரப்பட்டார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் ஜனவரி மாதம் கார் விபத்தின் போது எடுக்கப்பட்ட மம்தாவின் பழைய புகைப்படத்தை, தற்போது ஏற்பட்ட விபத்தோடு தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், மம்தா பானர்ஜிக்கு அடிபட்டது ஒரு இடம், கட்டு போட்டிருப்பது ஒரு இடம் எனப் பரவும் புகைப்படம் தொடர்பான செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.