2023ல் ‘மிதக்கும் சென்னை’ எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !
பரவிய செய்தி
- சென்னையன்ஸ் அடுத்த மாசம் கப்பல் வாங்கிடுங்க படகு பத்தாது..
2. சென்னைக்கு மிக அருகில் இல்லை சென்னையில் தான்..
மதிப்பீடு
விளக்கம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல நாட்களாகவே சென்னையில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘மிதக்கும் சென்னை’ என்று கூறி சமூக ஊடகங்களில் மழைநீர் நிரம்பி வழியும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.
மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்?
ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன் .
“முழுவாம இருக்காளாம்” pic.twitter.com/3AnzzjWLx0— Roaming Raman உங்கள் ரோரா (@roamingraman) November 30, 2023
திமுகவின் ஸ்டாலின் ஆட்சியில் சென்னை மழையில் வடக்கன்ஸ் நிலமை
( Fun video ) pic.twitter.com/PCbHjYSXwx
— நெடுங்குளம் டைமன்ட் – ޖޭޑި ISCO-2264 (@jeraldDraja) November 30, 2023
மேலும் சென்னையில் குடிநீர் வண்டிகள், சாக்கடை நீரை அகற்ற பயன்படுத்தப்படுகின்றன என்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன ?
மழைநீர் தேங்கி இருக்கும் சாலையில் மக்கள் மூழ்கியவாறு நிற்கும், முதல் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2021-ல் சென்னையில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது. இது கடந்த 2021 நவம்பர் 8 தினத்தந்தியின் செய்தியில் வெளியாகியுள்ளது.
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மனைகள் மூழ்கியவாறு உள்ள 41 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை ஆய்வு செய்ததில், இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் கடந்த 2021 நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இதே போன்று, சாலையில் மூழ்கியவாறு உள்ள சிவப்பு நிற காரின் புகைப்படமும் தற்போது எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வருகிறது. இதுவும் கடந்த 2021 நவம்பரின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு Deccan Herald தனது வலைப்பக்கத்தில் கடந்த 2021 நவம்பர் 28 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வடமாநிலத்தவரும் தற்போது பெய்த சென்னை மழையினால் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறி பரவி வரும் தகவல்களும் தவறானவையே. இந்த வீடியோ கடந்த 2022 ஜூலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை ADI MOTION யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.
சென்னையில் சாக்கடை நீரை வெளியேற்றும் குடிநீர் லாரிகள் ?
குடிநீர் வண்டியில் சாக்கடை தண்ணீரை உறிஞ்சி ஏற்றுகிறார்கள் எனப் பரவும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படத்தைக் குறிப்பிட்டு தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் செய்தி கடந்த 2021 நவம்பர் 29 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “நீரை உறிஞ்சும் இயந்திரம் மூலம் சேப்பாக்கம் பகுதி சி.என்.கே சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தோம். இப்பணியை விரைந்து முடிக்க குடிநீர் வழங்கல் & கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்களை அறிவுறுத்தினோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் குடிநீர் வழங்கல் & கழிவுநீர் அகற்று வாரியமானது, பொதுவாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதையும், கழிவுநீர் தேக்கங்களை அகற்றுவதையும் முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த வாரியத்தின் உதவி கொண்டு, நாம் குடிநீர் லாரிகளை தேவைக்கேற்ப ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளும் வசதிகளும் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 நவம்பரில் குடிநீர் வழங்கல் & கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்ட காட்சிகளை, சிலர் தவறுதலாக தற்போது சென்னையில் குடிநீர் லாரிகள் மூலம் சாக்கடை நீர் வெளியேற்றப்படுவதாகக் கூறி பரப்பி வருகின்றனர். இரண்டும் குடிநீர் வாரியத்தில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வாகனங்கள் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ‘மிதக்கும் சென்னை’ என்று கூறி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலவும் கடந்த 2021 நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தொடர்புடையவை அல்லது தவறானவை என்பதை அறிய முடிகிறது.