அருணாச்சல் எல்லையில் இந்திய, சீன ராணுவம் மோதல் எனப் பரப்பப்படும் பழைய வீடியோ
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
2022 டிசம்பர் 9ம் தேதி அருணாச்சல் பிரதேசம் தவாங் மாவட்டத்தின் எல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கடந்த 12ம் தேதி இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த மோதல் குறித்து 38 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அப்பதிவுகளில் இந்தியா – சீன இடையே தவாங்கில் நிகழ்ந்த மோதலில் ஏறக்குறைய 100 சீன ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும், 12 பேரை இந்திய ராணுவம் சிறை பிடித்து பின்னர் விடுவித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த மோதலில் 30 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைத்ததாகப் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன :
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவில் ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அதே போல டிசம்பர் 9ம் தேதி இந்திய – சீன மோதல் குறித்தும் இணையத்தில் தேடினோம்.
இந்த வீடியோ NDTV இணையதளத்தில் 2020, ஜூன் 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பிலேயே சிக்கிமில் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், சிக்கிமில் நிகழ்ந்த மோதலுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என அச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வீடியோவை CRUX என்ற யூடியூப் பக்கத்திலும் 2020 ஜூன் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பேச்சுவார்த்தைக்கு இடையே சிக்கிம் பகுதியில் மோதிக்கொண்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவின் description-ல் “இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 9ம் தேதி நடந்த இந்திய – சீன மோதலின் போது 100 சீன ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவோ, 12 பேரை இந்திய ராணுவம் சிறை பிடித்து பின்னர் விடுவித்ததாகவோ எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், டிசம்பர் 9ம் தேதி இந்திய – சீன இடையே அருணாச்சல் பிரதேசம் தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதல் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ உண்மையல்ல. அது 2020 ஜூன் மாதம் சிக்கிம் பகுதியில் நடந்த மோதல் எனப் பரவிய வீடியோ.
அதே போல், டிசம்பர் 9ம் தேதி மோதலில் 100 சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் தாக்கியதாகவும், அதில் 30 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும் பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.