மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால் சந்திரபாபுவிற்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் எனப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம்!  

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்கிற நிலையில் பாஜகவால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்படி பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் (16) மற்றும் ஜனதா தளம் (U) (12) ஆகிய கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை என்கிற நிலை உள்ளது. 

இந்நிலையில் கடந்த 5ம் தேதி NDA கூட்டாணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் தங்கள் கட்சி தொடர்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை ஆந்திர மாநில மக்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்தது என்பதை அறிய முடிந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக மார்ச், 29ம் தேதியன்று ’நியூஸ் மீட்டர்’ ஊடகத்தின் தெலுங்கு இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பரவக் கூடிய வீடியோவில் உள்ள காட்சியைப் புகைப்படமாகப் பார்க்க முடிகிறது. தெலுங்கில் உள்ள அந்த செய்தியை Google translate உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்ததில், அது அக்கட்சியில் உள்ள சில தொண்டர்கள் அதிருப்தியில் செய்தது என்பதை அறிய முடிந்தது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இத்தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பல கட்டங்களாக வெளியிட்டது. அதன்படி, அனந்தப்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக வெங்கடேஸ்வர பிரசாத் என்பவர் அறிவிக்கப்பட்டார்.  

அத்தொகுதியில் பிரபாகர் சவுத்ரி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடக்காததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சந்திரபாபுவின் படத்தை எரித்துள்ளனர். இதே செய்தி ‘Andhra Jyothy’ என்ற தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே போன்ற சம்பவம் குண்டகலில் (Guntakal) உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலும் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘Samayam Telugu‘ என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குறித்து அக்கட்சியினரிடம் அதிருப்தி இருந்ததால் கடந்த மார்ச் மாதம் அக்கட்சியினரே அவர்களது அலுவலகங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். அதனை தற்போது தெலுங்கு தேசம் கட்சி பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். 

முடிவு:

தெலுங்கு தேசம் கட்சி பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததால் அம்மாநில மக்கள் சந்திரபாபு நாயுடுவின் படத்தை எரித்தாக பரவும் தகவல் தவறானது. இந்த வீடியோ வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த கட்சி தொண்டர்கள் சிலர் அவர்களது அலுவலகத்தைச் சேதப்படுத்திய போது எடுக்கப்பட்டது. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader