கொடுங்கையூரில் மழைநீர் வடிந்த பிறகும் பழைய போராட்ட வீடியோவைப் பரப்பும் அதிமுகவினர் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் அரசுக்கும், மக்களுக்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தி ஒரு பாடமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளம் சென்னை மக்களின் இயல்வு வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரம்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொடுங்கையூரில், வெள்ளம் நிறைந்த சாலைகளுக்கு நடுவே நின்று மக்கள் போராட்டம் நடத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிமுகவினாரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அப்பதிவுகளில், பெரம்பூர் திமுக MLA-வைக் காணவில்லை என்றும், இன்னும் கொடுங்கையூர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை என்பது போன்றும் குறிப்பிட்டு, அந்த வீடியோவைப் பரப்பி வருவதையும் காண முடிகிறது,
காணவில்லை பொதுமக்கள் போராட்டம்
காணவில்லை காணவில்லை
பெரம்பூர் திமுக MLA வை காணவில்லை#RESIGN_STALIN pic.twitter.com/GeHsLcdQXn— Gowri Sankar D (@GowriSankarD_) December 11, 2023
MLAவை காணவில்லை..!!! pic.twitter.com/OaVsIRpPPs
— Hemand Kumar (@LDH_ADMK_VLR) December 11, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து தேடுகையில், பெரம்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொடுங்கையூரில் நேற்று (டிசம்பர் 11) வரை வெள்ள நீர் வடியவில்லை, எனவே போராட்டம் நடைபெற்றதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
கடந்த டிசம்பர் 06 அன்று கொடுங்கையூர் முத்தமிழ் நகர் வடக்கு தெற்கு அவன்யு தெருக்கள் மற்றும் முத்தமிழ் நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதாலும், மின் விநியோகம் கிடைக்காததாலும் DYFI அமைப்பு சார்பில் பெரம்பூர் பகுதி செயலாளரான ஜபருல்லா தலைமையில் பொது மக்களுடன் சேர்ந்து T.H ரோடு, முத்தமிழ் நகர் சந்திப்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் R.D.சேகர் அவர்களை கண்டித்து மலர் வளையம் வைத்து கொண்டு சாலை மறியல் செய்து உள்ளனர்.
அப்போது P6 கொடுங்கையூர் காவல் ஆய்வாளரான சரவணன் அவர்கள் அப்பகுதிக்கு வந்து, போராட்டகாரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்தப் போராட்டக் காட்சியை நேற்று (டிசம்பர் 11) நடந்ததாக வீடியோ வெளியிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அப்பகுதியில் நேற்று (டிசம்பர் 11) எடுக்கப்பட்ட வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுகுறித்து அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்திய வடசென்னை DYFI அமைப்பு மாவட்ட செயலாளர் சரவண தமிழன் அவர்களிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். அப்போது “உங்கள் தலைமையில், DYFI அமைப்பு சார்பில் கொடுங்கையூரில் போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள். போராட்டம் எப்போது நடைபெற்றது? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், போராட்டம் கடந்த டிசம்பர் 06 அன்று நடைபெற்றதாகக் கூறினார்.
மேலும், “அந்த வீடியோவின் கோஷத்திலேயே தெரியும், புயல் வந்து மூன்று நாட்களுக்கு பின் போராட்டம் நடத்தினோம். நேற்று போராட்டம் நடந்ததாகப் பரப்புவது அவதூறானது. அது உண்மை இல்லை. மேலும் இந்த போராட்டம் நடத்தியதற்கு பின்பு தான் எம்எல்ஏ உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு 3000 பேருக்கு பால், தண்ணீர் உட்பட தேவையான அனைத்தும் அரசின் மூலம் கிடைத்தது. நிவாரண பொருட்களை அப்பகுதி கவுன்சிலர்களுடன் சேர்த்து நாங்களும் பொதுமக்களிடமும் வழங்கினோம்.
அரசை விமர்சித்தாலும், அரசு பொதுமக்களுக்கு செய்ததையும் கண்டிப்பாக இங்கே சொல்ல தான் வேண்டும் அல்லவா? அவர்கள் செயல்படாமல் இருந்ததும் உண்மை தான். ஆனால் போராட்டத்திற்கு பின்பு அவர்கள் மக்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கியதும் உண்மை தான். இந்த போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் எங்கள் DYFI அமைப்பினரிடம் இருக்கும் அதையும் உங்களிடம் பகிர்கிறோம்.” என்று கூறி உறுதிபடுத்தினார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களையும் கீழே இணைத்துள்ளோம்.
மேலும் படிக்க: சென்னை கனமழையால் சாலையில் கவிழ்ந்த பேருந்து எனப் பரவும் 2018-ன் வீடியோ !
இதற்கு முன்பும் சென்னை வெள்ளம் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சென்னையில் தேங்கிய மழைநீரை புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றுவதாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், கொடுங்கையூர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியவில்லை என்று கூறி, பெரம்பூர் MLA-வைக் காணவில்லை என்று குறிப்பிட்டு அதிமுகவினரால் பரப்பப்பட்டு வரும் வீடியோ கடந்த டிசம்பர் ௦6 அன்று எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சோனியா அருண்குமார் என்பவரை அதிமுகவைச் சேர்ந்தவர் என யூடர்ன் கூறியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இக்கட்டுரையில் அவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுக எனக் குறிப்பிடவில்லை. எனினும், அதற்கான விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும் உள்ளது.
இவர் அதிமுகவைச் சேராதவர். அதிமுகவினர் பரப்பிய போலிச் செய்தியை மறுபதிப்பு செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, சவுக்கு சங்கர் ஆதரவு கணக்கில் இருந்து வெளியான கமெண்டிற்கு, ஒரு வாரமாகியும் மழைநீரை அகற்றவில்லை என கமெண்ட் செய்து இருக்கிறார். ஒரு போலிச் செய்திக்கு இன்னொரு போலிச் செய்தியை இணைத்தவர். இவ்வீடியோ தவறான தகவல் எனக் கட்டுரை வெளியிட்டும் தற்போதுவரை அப்பதிவை நீக்காமல் இருப்பவர்.