உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் காட்சி எனப் பழைய வீடியோவை பரப்பும் அமர்பிரசாத் !
பரவிய செய்தி
17 நாட்களாக உத்திரகாண்டின் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர் .
மதிப்பீடு
விளக்கம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12 அன்று ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கினர். இதற்கான மீட்புப்பணி 17-வது நாளான இன்றும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிடுவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உத்திரகாண்டில் தொழிலாளர்களை சுரங்கத்தில் இருந்து மீட்கும் காட்சி என்று கூறி 1:45 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று குறிப்பிடப்பட்டு அமர்பிரசாத் உட்பட பாஜகவினர் பலராலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
17 நாட்களாக உத்திரகாண்டின் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர் .
ஜெய் ஸ்ரீராம் ️ pic.twitter.com/Vj52uRInTz
— ஷிபின் Shibin (@Shibin_twitz) November 28, 2023
ஒவ்வொரு இந்தியனின் பிரத்தனையும் வெற்றி பெற்ற நேரம்..
எல்லா புகழும் இறைவனுக்கே❤️ pic.twitter.com/88CgCquIQf
— P.M (@tirunelveli_bjp) November 28, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இன்று எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
கடந்த நவம்பர் 24 அன்று NDTV தனது யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு பகுதியை பதிவு செய்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு வெளியே இழுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
மேலும் இதே வீடியோ நான்கு நாட்களுக்கு முன்பு இந்தியா டுடே யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
இதன் மூலம் இது கடந்த நவம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் படிக்க: உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் அதானிக்கு சொந்தமானதா ?
இதற்கு முன்பும் உத்தரகாசி மீட்பு நடவடிக்கைகள் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளி எனப் பரவும் தவறான புகைப்படம் !
முடிவு:
நம் தேடலில், உத்தரகாண்டில் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் காட்சி என அமர்பிரசாத் ரெட்டி உட்பட பாஜகவினர் அனைவரும் பரப்பும் வீடியோ, கடந்த நவம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட பழைய ஒத்திகை வீடியோ என்பதை அறிய முடிகிறது.