தற்போதைய தேர்தலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

பரவிய செய்தி

பரவிய செய்தி 1 : 

கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு காங்கிரசுக்கு செல்லுமிடமெல்லாம் செருப்பு! கார்த்தி சிதம்பரம் எனும் மைனர் குஞ்சை விரட்டியடித்த சிவகங்கை மக்கள் ! 

X link

பரவிய செய்தி 2 : 

காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை: “பார்த்து போ நீ… ஓட விட்டுறுவோம்..

X link

பரவிய செய்தி 3 : 

வேலூரில் ₹5 கோடி பறிமுதல்! திரும்பவும் உபிஸ் மாட்டிக்கிட்டானுங்க போல..  

X link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் பொதுமக்களால் விரட்டப்பட்டதாக வீடியோ ஒன்றை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அடுத்ததாகக் காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் காவல்துறை அதிகாரி ஒருவரை ‘பார்த்து போ நீ… ஓட விட்டுறுவோம்…’ எனத் தகாத வார்த்தைகளில் பேசியதாக வீடியோ ஒன்றை அதிமுகவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும் திமுக பொருளாளர் துரை முருகனின் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன? 

1. சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் தொடர்பான வீடியோவில் அவரை பார்த்து கேள்வி கேட்பவர், ’நீங்கள் 2019ம் ஆண்டும் ஓட்டு கேட்டு வந்தீர்கள். கொரோனாவின் போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். 

அதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில் அந்நிகழ்வின் போது வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ’கலாவதி கலா’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்த வீடியோ 2021, ஏப்ரல் மாதம் பதிவிடப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி கார்த்திக் சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நிகழ்ந்தது போலத் தவறாகப் பரப்புகின்றனர். 

2. திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காவல் துறை அதிகாரியைத் தரக்குறைவாகப் பேசியதாகப் பதிவிட்டுள்ள வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 

’பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்ததால் காவல் அதிகாரியை மிரட்டும் திமுக எம்எல்ஏ எழிலரசன்’ என்கிற தலைப்பில் 2019, ஏப்ரல் மாதம் சத்தியம் தொலைக்காட்சி வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளது. 

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போது காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாகத் தேரடிப் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய திமுகவினர் அனுமதி பெற்றிருந்தனர். அந்த நேரத்தில் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேரடிப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்ததினால் திமுகவினர் தங்களது கட்சிக் கொடியைக் காண்பிக்கக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை எதிர்த்து எம்.எல்.ஏ. எழிலரசன் ஆய்வாளர் சுரேஷ் சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இது தொடர்பாக அப்போதே எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடந்த இச்சம்பவத்தை தற்போது நடந்தது போல் தவறாகப் பரப்புகின்றனர். 

3. திமுக பொருளாளர் துரை முருகன் உதவியாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோவில், நேற்றைய முன் தினம் நள்ளிரவில் துரை முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை.

மேற்கொண்டு முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இந்த செய்தியை 2019, ஏப்ரல் 1ம் தேதி ’தந்தி டிவி’ அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளும் அப்போதே ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதனை தற்போது நடந்ததுபோல் தவறாகப் பரப்புகின்றனர்.  

மேலும் படிக்க : காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காரில் இருந்து பணப்பெட்டி பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரவும் பொய்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : கச்சத்தீவு தொடர்பாக வைகோ பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்ட ஏஎன்ஐ.

முடிவு : 

2019 மற்றும் 2021ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை தற்போதைய தேர்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader