2023ல் பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பும் வலதுசாரிகள்!
கடந்த ஆண்டு பாஜக நிர்வாகிகளுக்குள் நடந்த மோதலை, நேற்றைய தினம் பாஜக நிர்வாகியை யாரோ ஒருவர் தாக்கியது போன்று தவறாகப் பரப்பப்படும் வீடியோ.
பரவிய செய்தி
தமிழ்நாடு: பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜு நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
சென்னை கிழக்கு நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் பிஜு நேற்று மாலை தாக்கப்பட்டதாக ‘Megh Updates’ என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதனை வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
Tamil Nadu: BJP IT & Social Media Cell District Secretary* Rajesh Biju was brutally thrashed last evening in front of his house.
Rajesh is undergoing treatment in Sri Chakra Hospital, Nanganallur, Chennai East. pic.twitter.com/mOXmEgM2Nt
— IndSamachar News (@Indsamachar) April 15, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய சிசிடிவி வீடியோவில் ’31.07.2023’ என்கிற தேதி இருப்பதை காண முடிகிறது. அந்த வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடினோம். இதே வீடியோ 2023, ஆகஸ்ட் 1ம் தேதி ‘சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி!’ என்கிற தலைப்பில் ‘Lokal App’ என்ற தளத்தில் செய்தியாக வெளியாகியுள்ளது.
அதில், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்துப் பேசிவிட்டு, தனது உணவகத்திற்குள் மது அருந்துகிறார் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. அந்த வீடியோவை பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷ் என்பவர் திட்டமிட்டு வெளியிட்டதாகக் கூறி அவரை சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விகடன், சன் நியூஸ், தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக சுப்பையா, முத்தரசன் மற்றும் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது பரவும் வீடியோ குறித்துக் காவல் துறையும் விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
விகடன் வெளியிட்ட செய்தியில், ”கடையை வாடகைக்கு எடுத்து அதைத் தனது பா.ஜ.க அலுவலகமாக மாற்றிய சுப்பையா, இரவு நேரங்களில் தன்னுடைய நண்பர்கள், ஆதரவாளர்களை வரவழைத்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடை உரிமையாளருக்கும் சுப்பையாவிற்கும் இடையே நீண்ட நாள்களாகப் பிரச்சனை இருந்து வந்தது. இந்தச் சூழலில் சுப்பையாவின் பழைய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன” என நங்கநல்லூர் பகுதி பாஜக-வினர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடகையும் தராமல், கடையில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதினால், இது பற்றி சுப்பையாவிடம் கடை உரிமையாளர் கேட்டுள்ளார். அதற்கு ‘உயிரோடு இருக்க முடியாது’ எனக் கடை உரிமையாளரை சுப்பையா மிரட்டியதாக விகடன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து பரவக் கூடிய இந்த வீடியோ 2023ம் ஆண்டு பாஜக நிர்வாகிகளுக்குள் நடந்த பிரச்சனை என்பது தெளிவாகிறது. இதனைத் தேர்தல் சமயத்தில் பாஜக நிர்வாகி, யாரோ ஒரு நபரால் தாக்கப்பட்டது போன்று தவறாகப் பரப்பப்படுகிறது.
முடிவு :
சென்னையில் பாஜக நிர்வாகி நேற்றைய தினம் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது 2023ம் ஆண்டு பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல்.