மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஓம் நமச்சிவாய என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதாகப் பரவும் பொய் !
பரவிய செய்தி
சென்னையின் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். அங்கு, கோயில் தெருக்களைச் சுற்றி,எங்கேயும்,ஓம் நமசிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம், மனசிற்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டுமாம். அக்கோயிலின், EO இப்படிச் சொல்லி மிரட்டி, கோயிலுக்குள்ளேயே, போலீஸை வரவழைத்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெருக்களைச் சுற்றி ‘ஓம் நமச்சிவாய’ என்கிற வாசகத்தைச் சத்தமாக ஒலிக்கக் கூடாது என்றும் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் அக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறியுள்ளார். மேலும் கோவிலுக்கு உள்ளேயே காவலர் துறையினரை வரவழைத்து பக்தர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.
சென்னையின் இதயத்தில் உள்ளது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயிலுள், கோயில் தெருக்களைச் சுற்றி, எங்கேயும், “ஓம் நமசிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம், மனசிற்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டுமாம். அக்கோயிலின், EO இப்படிச் சொல்லி மிரட்டி, கோயிலுக்குள்ளேயே, போலீஸை வரவழைத்து… pic.twitter.com/uw6KgG9SoH
— அன்பெழில் (@anbezhil12) November 29, 2023
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் தொடக்கத்தில் ஒருவர் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கமிடுகிறார். காவலர் ஒருவர் ‘நீங்கள் போஸ்டர் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தீர்கள்’ எனக் கூட்டத்தில் உள்ள ஒருவரிடம் கூறுகிறார். அதற்கு ‘போஸ்டர் பிடிக்கக் கூடாது என ஏதாவது உள்ளதா? அதில் ஏதேனும் தப்பான வாசகம் உள்ளதா? கடவுளை நம்பாதவர்கள் முட்டாள் என்றுதானே உள்ளது’ எனக் கூட்டத்தினர் பதில் அளிக்கின்றனர். பிறகு உள்ளே பேனர் பிடிக்கக் கூடாது என்கிற வாதங்களும் நடைபெறுவதைக் காண முடிகிறது.
இவற்றைக் கொண்டு இணையத்தில் தேடியதில், 2023, நவம்பர் 20ம் தேதி ‘ஒன் இந்தியா’ தளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. அதில், ‘யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான தனியார் கட்டடத்தில், ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் போர்டு வைத்திருந்தார். அந்த போர்டு சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது’ என்றுள்ளது.
இது தொடர்பாக ‘நியூஸ் தமிழ் 24×7’ ஊடகத்திலும் வீடியோவுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதில் பரவக் கூடிய வீடியோவில் நீல நிற சட்டை அணிந்து காவல் அதிகாரியிடம் பேசுபவரை காண முடிகிறது.
யாதவ மகாசபை அலுவலக கட்டிடத்தில் ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்’ என்கிற வாசகத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனரைச் சென்னை மாநகராட்சி அகற்றியதாக நியூஸ் தமிழ் 24×7 செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் செயலை கண்டித்து யாதவ மகா சபை, பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோர் கபாலீஸ்வரர் கோவிலில் கடவுள் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டத்திற்குக் காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், பதாகையுடன் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாதவ மகா சபை தலைவர் தேவநாதனும் அவரது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மிகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகம் அடங்கிய பெயர் பதாகை யாதவ மகா சபையின் தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டதை கண்டித்து ஆண்டவனிடம் நீதி கேட்டு மனமுருகி பிரார்த்தனை செய்ய சென்ற pic.twitter.com/pMmdXqy7Vn
— Devanathan Yadav T (@DevanathayadavT) November 20, 2023
கடவுளிடம் மனு அளிக்கும் இப்போராட்டம் குறித்து ‘தினமலர்’ இணையதளத்திலும் கடந்த நவம்பர் 22ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.
இவற்றைக் கொண்டு போராட்டமும் காவல் துறையின் பேச்சுவார்த்தையும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் வாசகத்திற்கு நடந்தது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஓம் நமசிவாய எனச் சத்தமாக உச்சரிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறியதாகப் பரவும் அத்தகவல் உண்மை அல்ல.
அது யாதவ மகாசபை அலுவலக கட்டிடத்தில் ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்’ என்னும் பேனர் அகற்றப்பட்டதையொட்டி நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.