அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடி புகைப்படம்| கோரிக்கை என்ன ?
பரவிய செய்தி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் லெட்டர் பேடில் மோடியின் புகைப்படம்.
மதிப்பீடு
விளக்கம்
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மகன் மற்றும் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் அலுவல் லெட்டர் பேடில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரவீந்திரநாத் குமார் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் வெளியிட்ட கடிதத்தை பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்தும் நம்மிடம் கேட்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சென்று பார்க்கையில், அவர் வெளியிட்ட லெட்டர் பேட் பதிவுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
முக்கிய கோரிக்கை :
நவம்பர் 19-ம் தேதி பாராளுமன்ற உரையில் தமிழை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் கோரிக்கை வைத்து இருந்தார். அந்த கோரிக்கை குறித்த தகவலும் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் முகநூலில் பதிவாகி இருக்கிறது.
இதேபோல், நவம்பர் 19-ம் தேதி தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து அளித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து எனும் அங்கீகாரத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கியது . ஆகையால், இந்தியாவின் தேசிய அலுவல் மொழியில் தமிழை இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.