ஓபிஎஸ் தாயார் இரங்கல் பதிவிற்கு ஓபிஎஸ் மனைவியின் படத்தைச் சீமான் பதிவிட்டதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

இதுக்கு பெயர் தான் அரைவேக்காடு!!! ஒரு வேளை போதையில இருந்திருப்பானோ?

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

2022 பிப்ரவரி 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வின் காரணமாக உயிர் இழந்தார். இந்நிகழ்விற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Archive link

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டரில் பதிவிட்ட இரங்கல் பதிவில் ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாளின் புகைப்படத்திற்குப் பதிலாக, ஓபிஎஸ்-ன் மனைவி விஜயலட்சுமியின் புகைப்படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கியதாகச் சாணக்கியா டிவி உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் திமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. அதில் சீமான் மது போதையில் இருந்ததினால் இப்படிப் பதிவு செய்திருப்பார் எனப் பரப்புகின்றனர். 

Archive link 

உண்மை என்ன ? 

பரப்பப்படும் சாணக்கியா நியூஸ் கார்டில் ‘25.02.2023’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். ஓபிஎஸ் தாயார் இறந்தது குறித்து சாணக்கியா “ஓபிஎஸ் தாயார் காலமானார்” என்ற தலைப்பில் ஒரு நியூஸ் கார்டினை மட்டும் பதிவிட்டுள்ளனர். 

Archive link 

அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழனியம்மாள் இறப்பு குறித்து சீமானின் டிவிட்டர் பதிவு குறித்து எந்த நியூஸ் கார்டும் அவர்களது பக்கத்தில் இல்லை.

மேற்கொண்டு, பழனியம்மாளின் இறப்பு குறித்து சீமான் டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். கடந்த 25ம் தேதி அவரது இரங்கல் பதிவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்புத்தாயார் அம்மா பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 

Archive link 

தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம்  குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அம்மையார் பழனியம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இரங்கல் செய்தி நாம் தமிழர் கட்சியின் கார்டு வடிவிலும் படமாகப் பதிவிட்டுள்ளார். அதில், ஓபிஎஸ் அவர்களின் தாயார் புகைப்படமே உள்ளது. அந்த கார்டில் ஓபிஎஸ்-ன் மனைவி புகைப்படம் இருப்பது போல எடிட் செய்து சீமான் தவறாகப் பதிவிட்டதாக ஒரு பொய்யான தகவலை திமுகவினர் பரப்பி வருகின்றனர்.

இதிலிருந்து, ஓ.பன்னீர் செல்வம் தாயார் இறந்தது குறித்த சீமானின் இரங்கல் பதிவில் ஓபிஎஸ் மனைவியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகப் பரவும் சாணக்கியா நியூஸ் கார்டு உண்மை அல்ல என்பது தெரிய வருகிறது.

மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சியின் சீமான் பற்றி பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு !

முன்னதாக சீமான் பற்றி பரப்பட்ட வதந்திகளின் உண்மைத் தன்மைக் குறித்த செய்திகளின் தொகுப்பினை யூடர்ன் பதிவிட்டுள்ளது.

மேலும் படிக்க : அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !

முடிவு : 

நம் தேடலில், ஓபிஎஸ் தாயார் புகைப்படத்திற்குப் பதிலாக அவரது மனைவியின் புகைப்படத்தைச் சீமான் பதிவிட்டதாக திமுகவினர் பரப்பும் சாணக்கியா நியூஸ் கார்டு போலியானது. சீமானின் பதிவை எடிட் செய்து பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader