படையப்பா பட வெள்ளி விழாவில் அண்ணாமலை பேசியதாகப் பொய் பரப்பும் பாஜவினர் !
பரவிய செய்தி
அன்று இந்த அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று சன் டிவியும் சரி, திமுக கொத்தடிமைகளும் சரி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!!
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் படையப்பா படம் குறித்து ரஜினி முன்னிலையில் உரையாற்றியதாக இளைஞர் ஒருவர் பேசக்கூடிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
https://twitter.com/Srinithiarun/status/1615716873689264130
அப்பதிவுகளில் அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என சன் டிவியோ, திமுகவினரோ கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
அன்று இந்த அண்ணாமலை இப்படி வளர்ந்து வருவார் என்று சன் டிவிக்கு தெரிய வாய்ப்பில்லை pic.twitter.com/vjRtdjZXej
— Kishore (@Kishore0901) January 17, 2023
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களாக கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், வைரல் வீடியோவில் உள்ள புகைப்படம் ‘Angry Fellow’ என்ற டிவிட்டர் பக்கத்தில் 2017, மே மாதம் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், இந்த வீடியோவை நீங்கள் நினைவில் வைத்திருந்தாள், நீங்கள் ஒரு உண்மையான தலைவர் ரசிகர். இதில் பேசக்கூடிய நபர் ‘பெருமாள் மணி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
If u remember dis video u r true #ThalaivarFan #Rajinikanth tat flashback inspiring speech by tat boy perumal mani now 2 supports #Thalaivar pic.twitter.com/ge4KL33TIk
— Angry Fellow (@IamAngryFellow) May 24, 2017
மேலும், அப்பதிவில் உள்ள புகைப்படத்தில் “Padayappa Silver Jubilee Manigandan’s speech” என இருப்பதைக் காண முடிந்தது. இந்த தலைப்பைக் கொண்டு யூடியூபில் தேடியபோது, ‘நவீன் குமார்’ என்ற யூடியூப் பக்கத்தில் 2011, மார்ச் 6ம் தேதி பதிவிட்டிருந்த வீடியோ கிடைத்தது.
அதில், “அரட்டை அரங்கத்தில் இன்றைய இளைஞர் சமுதாயத்தைக் கொண்டு செலுத்துவது எது? என்ற தலைப்பில் மணிகண்டன் என்பவர் சிறப்பாகப் பேசியதை சூப்பர் ஸ்டார் பார்த்துள்ளார். அவருக்கு படையப்பா திரைப்பட வெற்றி விழாவில் மரியாதை செலுத்தப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவர் தற்போது உரையாற்றுவார் என நடிகர் விவேக் பேசுகிறார். அவரை தொடர்ந்து மணிகண்டன் தனது உரையைத் தொடங்குகிறார்.
பெருமாள் மணி என்கிற மணிகண்டன் தற்போது எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகிறார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் தேடினோம்.
https://twitter.com/aperumalmani/status/1469932250036797441
2021, டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று 1999ம் ஆண்டு வெளியான செய்தித்தாள் புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். ‘பாராட்டுகிறோம்’ எனத் தலைப்பிட்ட அச்செய்தித்தாள் விளம்பரத்தில், “23.05.99 ஞாயிறு அன்று சன் டி.வியில் விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசிய நெல்லை இளைஞன் மணிகண்டன், இளைஞனே… உன் தோற்றத்தில் விவேகானந்தரைக் கண்டேன்” எனப் பாராட்டப்பட்டுள்ளது.
மேலும், படையப்பாவின் வெற்றி விழாவில் நீ கௌரவிக்கப்படுவாய் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே படையப்பா திரைப்படத்தின் வெள்ளி விழாவில் மணிகண்டன் உரையாற்றியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பரவக் கூடிய வீடியோவில் ‘OnlySuperstar.com’ என்ற வாட்டர் மார்க் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனைக் கொண்டு அந்த இணையதளத்தில் தேடியதில், 2011, மார்ச் 7ம் தேதி “சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதிலிருந்து, பரவக்கூடிய வீடியோவில் இருப்பது பெருமாள் மணி எனப்படும் மணிகண்டன் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலி, பாஜக தலைவர் அண்ணாமலை ரஜினியைப் பாராட்டி படையப்பா திரைப்பட வெற்றி விழாவில் பேசியதாகப் பரவும் வீடியோவில் இருப்பது பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பெருமாள் மணி என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.