பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண்ணுடன் ராகுல் காந்தி நடை பயணமா?

பரவிய செய்தி

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேச விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பிய அமுல்யா லியோனா நோரான்ஹோ(Amulya leona Noranho) என்ற பெண் ராகுல் காந்தியுடன் நடந்து அவரைக் கட்டி அணைத்துள்ளார். இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா ஜெயராம் ரமேஷ்?

மதிப்பீடு

விளக்கம்

2022ம் ஆண்டுச் செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை எனும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுமான நடைபயணம் ராகுல் காந்தி தலைமயில் தொடங்கப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு வருகின்றனர். கேரளா மாநிலத்தில் இப்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் ஒரு பெண் ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண் இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பிய அமுல்யா லியோனா நோரான்ஹோ(Amulya leona Noranho) என வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

Twitter Link | Archive Link

உண்மை என்ன?

இது குறித்துச் சமூக வலைத்தளங்களில் தேடியபொழுது ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் கேரளாவை சேர்ந்த மிவா அன்றிலியோ(Miva Andreleo) என்று தெரியவந்தது. மேலும் அவர் காங்கிரஸின் கேரளா மாணவர் அணியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது. இதைப் பற்றி வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் மிவா அன்றிலியோ(Miva Andreleo) அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வலதுசாரிகளால் பரப்பப்படும் அந்தப் புகைப்படம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. அதில் அவர் “Happiest Moment in my life. My own RaGa” என மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

Instagram Link

வலதுசாரிகளால் சொல்லப்படும் கர்நாடகாவை சார்ந்த அமுல்யா லியோனா நோரான்ஹோ(Amulya leona Noranho) என்ற பெண் பெங்களூரில் 2020ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் நடந்த இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பி அதற்குக் கைதாகி உள்ளார். அப்பொழுது மேடையில் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியும் இருந்துள்ளார். கைதுக்குப் பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தான் அனைத்து நாடுகளும் ஒன்று. பாகிஸ்தான் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத் எனக் கூற வந்தேன். ஆனால் அதற்குள் மைக்கை வாங்கிவிட்டனர்” என்று கூறியுள்ளார். இதை பற்றி shethepeople என்ற வலைத்தளத்திள் 2020ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

முடிவு:

நம் தேடலில், வலதுசாரிகளால் பரப்பப்படும் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் காங்கிரஸின் கேரளா மாணவரணி தலைவர் எனவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட லியோனா நோரான்ஹோ(Amulya Leona Noranho) இல்லை எனவும், அது பொய்யான தகவல் எனவும் தெரியவருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader