மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது : சொன்னது துல்கர் சல்மான் இல்லை.. நிதியமைச்சரின் கணவர் !
பரவிய செய்தி
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருகின்ற தேர்தலே இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். இந்தியாவின் ஒட்டு மொத்த சித்திரமே மாறும். செங்கோட்டையில் இருந்து வெறுப்பு பேச்சுக்களைக் கேட்பீர்கள். மணிப்பூர் மாதிரியான சூழ்நிலைகள் நாடு முழுவதும் நிலவும். – நடிகர் துல்கர் சல்மான்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2 ஆட்சிக் காலத்தை (10 ஆண்டுகள்) நிறைவு செய்துவிட்டார். மூன்றாவது முறையாகவும் அவர் பிரதமராக வேண்டுமென பாஜக தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.
இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இதுவாகவே இருக்கும் என்று நடிகர் துல்கர் சல்மான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சொன்னதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என துல்கர் சல்மான் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டில் ‘INQUILAB INDIA’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இன்குலாப் இந்தியா என்னும் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று உள்ளது. ஆனால், அப்பக்கத்தில் துல்கர் சல்மான் கூறியதாகப் பரவும் தகவல் பதிவிடப்படவில்லை.
மேலும் துல்கர் கூறியதாகப் பரவும் கருத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் கூறியதாக ஒரு கார்டு அப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
இது பற்றி மேற்கொண்டு தேடியதில் ‘Live mint’ தளத்தில் நேற்றைய (ஏப்.8) தினம் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை ஒன்று கிடைத்தது. அக்கட்டுரையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் நடக்காது. மோடியும் அவரது அமைச்சரவையும் மீண்டும் வந்தால் அரசியலமைப்பு மற்றும் இந்திய வரைபடம் மாறும். செங்கோட்டையில் இருந்து மோடியே வெறுப்புப் பேச்சு பேசுவார் என பரகால பிரபாகர் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரை தீபக் சர்மா என்பவருக்கு பரகால பிரபாகர் அளித்த நேர்காணலுடன் தொடர்புடையது. ஏப்ரல் 6ம் தேதி தீபக் சர்மாவின் யூடியூப் பக்கத்தில் அந்த நேர்காணல் பதிவிடப்பட்டுள்ளது. பரகால பிரபாகர் சொன்னதாக Live mint தளத்தில் உள்ளவை, அந்த நேர்காணலில் இருப்பதை யூடர்ன் உறுதி செய்தது. இன்னும் பாஜக குறித்து பல விமர்சனங்களை அந்நேர்காணலில் அவர் முன்வைத்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் தாக்குதல் சம்பவங்களும் வெறுப்பு பேச்சும் அதிகரித்துள்ளது. பாஜகவோ அல்லது அவர்களது கூட்டணி அரசுகளோ ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வெளிப்படை வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது. இது குறித்து பரகால பிரபாகர் சொன்ன கருத்தை துல்கர் சல்மான் சொன்னதாகத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு :
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரவிருக்கும் தேர்தல்தான் இந்தியா சந்திக்கும் கடைசி தேர்தல் என துல்கர் சல்மான் சொன்னதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநரும் பரகால பிரபாகரின் கருத்து.