நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த மனோரஞ்சன் SFI கூட்டத்தில் எனப் பரவும் தவறான நபரின் புகைப்படம் !
பரவிய செய்தி
நேற்று பார்லிமெண்ட்டில் நுழைந்து அசாம்பவிதம் செய்த மைசூர் மனோரஞ்சன் ஒரு இடதுசாரி மாணவர். இது அவர் மா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான SFI கூட்டத்தில் பேசிய காட்சி…
மதிப்பீடு
விளக்கம்
மக்களவையின் பார்வையாளர் அரங்கிலிருந்து நேற்று (டிசம்பர் 13 ) மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா என்ற இரண்டு இளைஞர்கள் எம்பிகளின் மேஜை மீது ஏறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய 4 பேரும் டெல்லி சிறப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அத்துமீறி உள்ளே நுழைந்த மனோரஞ்சன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான SFI (Students’ Federation of India) அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, SFI கூட்டம் ஒன்றில் இளைஞர் ஒருவர் மைக்கில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பார்லிமெண்ட் தாக்குதல் மனோ ரஞ்சன் –
நேற்று பார்லிமெண்ட்டில் நுழைந்து அசாம்பவிதம் செய்த மைசூர் மனோரஞ்சன் ஒரு இடதுசாரி மாணவர். இது அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்எப்ஐ கூட்டத்தில் உரையாற்றும் காட்சி pic.twitter.com/kjHxUmdUzU
— Sukumar Dharapuram (@SukumarBjp26) December 14, 2023
மேலே படத்தில் வட்டமிட்டு காட்டிய நபர் மனோரஞ்சன் .தேசிய கல்விகொள்கைக்கு எதிராக போராட்ட கூட்டத்தில் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு கூட்டத்தில். இவன்தான் பாராளுமன்றத்தில் கலர் குண்டு வீசியவன் நக்சலைட் pic.twitter.com/LSyFyUlqcV
— Mahesh M (@mahesh74391485) December 14, 2023
மேலும் இந்த செய்தி Janam tamil போன்ற வலைத்தளப் பக்கங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படத்தில் இருப்பவர் டெல்லி சிறப்பு காவல்துரையினாரல் கைது செய்யப்பட மனோரஞ்சன் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து, SFI கர்நாடகா அமைப்பின் முகநூல் பக்கத்தில் இன்று (டிசம்பர் 14) மறுப்பு தெரிவித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் “மாண்புமிகு உள்துறை அமைச்சர், தவறான செய்திகளை பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புனிதத் தலமான லோக்சபாவுக்குள் இன்று சில விஷமிகள் நுழைந்து கலர் வாயுவைத் தெளித்து பெரும் பாதுகாப்புப் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இது மன்னிக்க முடியாத மற்றும் கண்டிக்கத்தக்க குற்றம்.
இதை இந்திய மாணவர் சங்கம் (SFI) கர்நாடக மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் செயலைச் செய்தவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயல்களில் ஈடுபட்ட இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ஹரியானாவை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
லோக்சபாவில் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? இவர்களுக்குப் பின்னால் யார் ? மேலும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவர்கள், கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம், கண்ணியம் ஆகியவற்றுக்காக #SFI சங்கம் பல தசாப்தங்களாக நாடு தழுவிய அளவில் போராடி வருகிறது. இந்த தேசத்தின் வகுப்புவாத பாஜக கட்சிக்காரர்கள், எங்கள் அமைப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், SFI மைசூர் மாவட்டத் தலைவர் விஜய்குமார் பெயரை தேவையில்லாமல் இழுத்து, அந்த அமைப்பை தத்துவார்த்தமாக எதிர்கொள்ள முடியாத பாஜகவினர் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள்.
இந்த செய்தி அறிக்கையின் மூலம், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற வேலையைச் செய்யும் பாஜகவின் ஐடி செல்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தவறான செய்திகளைப் பகிரும் அனைத்து தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். – இந்திய மாணவர் சங்கம் (SFI), கர்நாடக மாநிலக் குழு சார்பில்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வைரலாகும் புகைப்படம் கடந்த ஆண்டு SFI Mysore முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
உண்மையான மனோரஞ்சனின் புகைப்படம் குறித்து தேடியதில், இந்தியா டுடே வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவரின் புகைப்படம் உள்ளது. இதன் மூலம், கீழே இடதுபக்கம் உள்ள புகைப்படத்தில், கூட்டம் ஒன்றில் மைக்கில் பேசுவது போல உள்ளவர், SFI மைசூர் மாவட்டத் தலைவரான விஜய்குமார் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் படிக்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக பரப்பப்படும் தவறான செய்திகள் !
முடிவு:
நம் தேடலில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் SFI அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் தவறானது என்பதையும், அவர் மைசூரைச் சேர்ந்த விஜய்குமார் என்பதையும் அறிய முடிகிறது.