நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக பரப்பப்படும் தவறான செய்திகள் !
பரவிய செய்தி
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த போது ராகுல் காந்தி அவையில் இல்லை – புதிய தலைமுறை
மதிப்பீடு
விளக்கம்
2001ல் நடந்த பழைய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளான இன்றும் மக்களவைக்குள் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து மஞ்சள் வண்ண புகை வரும் குண்டை வீசியது பெறும் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தி உள்ளது.
இது அரசியல் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை, நேரடி செய்தி ஒளிபரப்பின் 1:49 PM மணி நேரத்தில் “அத்துமீறலின் போது பிரதமர், ராகுல் அவையில் இல்லை” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.
மேலும் நேரடி ஒளிபரப்பின் 1:50 PM மணி நேரத்திலும் “காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த போது ராகுல் காந்தி அவையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
இது குறித்து கார்த்தி சிதம்பரம் எம்பி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மக்களவைக்குள் வண்ண புகை குண்டு வீசப்பட்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அருகே நின்று கொண்டிருப்பதை தெளிவாக காண முடிகிறது.
இதே போன்று இந்தியா டுடே ஊடகம் தனது யூடியூப் பக்கத்தில் “மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் 2023: கேலரியில் இருந்து லோக்சபா அவைக்குள் குதித்த நபர்கள், சபை ஒத்திவைக்கப்பட்டது.” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோவிலும், இந்த அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த போது ராகுல் காந்தி தனது இருக்கையின் அருகே நின்று கொண்டிருப்பதை உறுதிபடுத்த முடிகிறது.
நுழைவு சீட்டு :
இதுதவிர, “மக்களவையில் பார்வையாளராக செல்ல பாஸ் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்” என்று தருமபுரி எம்பி செந்தில் குமாரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்ட பதிவு ஒன்றுடன் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்கு எம்பி அவரே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி பாஜகவைச் சேர்ந்த Sanghi Prince சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவையும் காண முடிந்தது.
ஆனால் இன்றைய மக்களவை கூட்டத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவரும், பாஜக மக்களவை உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தியே உள்ளே சென்றுள்ளனர். இதையடுத்து, அப்பதிவை அவர் நீக்கி இருக்கிறார்.
முடிவு:
நம் தேடலில், மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த போது ராகுல் காந்தி அவையில் இல்லை என்ற புதியதலைமுறையின் செய்தி தவறானது என்பதையும், பாதுகாப்பு மீறலுக்கு திமுக எம்பியை குறிப்பிட்டு தவறான செய்தியை பரப்பி உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.