பதஞ்சலி சேர்மன் கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவா ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்கள், செய்திகளில் வெளியான பிறகு அதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக சாடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது, பின்னர் பாபா ராம்தேவ் தன்னுடைய கருத்துக்களை திரும்ப பெற்றது வரை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சேர்மன் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என பாலகிருஷ்ணா சிகிச்சை பெறும் 11 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல, 2019-ல் நிகழ்ந்தது எனத் தெரிய வந்தது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி Nedrick News எனும் சேனலில், தற்போது வைரலாகும் காட்சி அடங்கிய செய்தி வெளியாகி இருக்கிறது.
பாலகிருஷ்ணா ஃபுட் பாய்சன் காரணமாக ஹரித்வாரில் உள்ள பூமனந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார் என ஜீ நியூஸ் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் அலோபதி மருத்துவம் குறித்து தவறாக பேசினாலும், தங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் அலோபதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதே உண்மை. ஆனால், இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க : கடுமையாக சாடிய இந்திய மருத்துவ சங்கம், மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ் !
முடிவு :
நம் தேடலில், பதஞ்சலி சேர்மன் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனக்கு கோவிட் வந்து சுவாசிக்க முடியாமல் போனதும் பிரபல தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாக பரவும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.