எம்.பி ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவு எனப் பரவும் வதந்தி !
பரவிய செய்தி
திமுக MP ஆ. ராசாவின் கோயம்புத்தூர் அரண்மனை வீட்டை, இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவு…!
மதிப்பீடு
விளக்கம்
திமுக எம்பி ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீட்டை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறி, ஒரு பெரிய வீட்டின் முன்பு பத்திரிக்கையாளர்கள் நிற்பது போன்றும், வீட்டின் பால்கனியில் இருவர் நிற்பது போன்றும் உள்ள புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
திமுக MP ஆ. ராசா வின் கோயம்புத்தூர் அரண்மனை வீட்டை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவு..!
விழி பிதிங்கி நிற்கிறார் ஆ. ராசா..!இறைவனை பழிப்பவனுக்கு இதைவிட அதிக தண்டனை வந்து சேரும்..! pic.twitter.com/zoz2dlUMS7
— Bharathiya Citizen (@LawAcademics) December 11, 2023
திமுக MP ஆ. ராசா வின் கோயம்புத்தூர் அரண்மனை வீட்டை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவு..!
விழி பிதிங்கி நிற்கிறார் ஆ. ராசா..!இறைவனை பழிப்பவனுக்கு இதைவிட அதிக தண்டனை வந்து சேரும்..! pic.twitter.com/zoz2dlUMS7
— Bharathiya Citizen (@LawAcademics) December 11, 2023
மேலும் இந்த செய்தி யூடியூப் பக்கங்களிலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது திமுக எம்பி ஆ.ராசாவின் வீடு அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் புகைப்படத்தை குறிப்பிட்டு, கடந்த மார்ச் 13 அன்று Indian Express இணையதளத்தில் “கட்டட உரிமையாளர், முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ, லாலு உதவியாளர்: அபு டோஜானா ஒன்றிய நிறுவனங்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது.
அதில், ” பாட்னாவைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சையத் அபு டோஜானா சிக்கலில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. 2006-ல் லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இரண்டு ரயில்வே ஹோட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது தொடர்பான (IRCTC மோசடி) விசாரணை இது.” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் இது ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீடு அல்ல என்பதையும், முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ-வான சையத் அபு டோஜானாவிற்கு சொந்தமாக பாட்னாவில் அமைந்துள்ள வீட்டில், அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
திமுக எம்பி ஆ.ராசாவிற்கு சொந்தமான சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை:
திமுகவின் நீலகிரி எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பினாமி நிறுவனத்தில் 15 அசையா சொத்துகளை பணமோசடி தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் (பிஎம்எல்ஏ) கடந்த அக்டோபர் 11 அன்று கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
ஆ.ராசா, ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் (2004 முதல் 2007 வரை) குருகிராமில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் 45 ஏக்கர் (ரூ. 55 கோடி மதிப்பு) சொத்துக்கள், இந்த குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி நேரடியாக வாங்கப்பட்டது தெரியவந்தது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரது பினாமிகளும் அத்தகைய சொத்துக்களை அனுபவிப்பதைத் தடுக்க, இணைக்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது என நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
அதேநேரத்தில், ஆளும் கட்சியின் எம்.பியான ஆ.ராசாவின் கோவை வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க: சத்ய சாய்பாபா காலில் எம்பி ஆ.ராசா விழுந்து வணங்குவதாகப் பரவும் தவறானப் புகைப்படம் !
இதற்கு முன்பும் திமுக எம்பி ஆ.ராசா குறித்து பல செய்திகள் பரவின. அது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இந்து மதம் பற்றி ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு.. ஆதாரங்கள் இங்கே !
முடிவு:
நம் தேடலில், திமுக எம்பி ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீட்டை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறி பரவி வரும் தகவல் தவறானது. பரப்பப்படும் புகைப்படம் பாட்னாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.