விடுதலை புலிகள் பிரபாகரன் என் நெஞ்சில் சாய்ந்து தூங்குவார் என சீமான் கூறினாரா ?
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன் நெஞ்சில் சாய்ந்து தூங்குவார் என சீமான் கூறியதாக சிறு வீடியோ பகுதி சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
27 நொடிகள் கொண்ட வீடியோவில், பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை காண்பித்து கேள்வி கேட்கும் பொழுது, ” அவரு என்ன பண்ணு வாருன்னா.. காலை நேரங்களில் என் நெஞ்சில படுத்தே தூங்குவார். அத தவற விடுறேன் ” என சீமான் பதில் அளிப்பது போன்று இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் 27 நொடிகள் கொண்ட வீடியோவை கவனிக்கும் போது அதிக எடிட் செய்யப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. கலாட்டா தமிழ் சேனலுக்கு சீமான் அளித்த முழு வீடியோ குறித்து தேடுகையில், ” மக்கள் அடிமையாகிவிட கூடாதுன்னுதான் நான் பேசிட்டு இருக்கேன்..” எனும் தலைப்பில் மார்ச் 28ம் தேதி வெளியான வீடியோ கிடைத்தது.
இவ்வீடியோவில், ” 5.45வது நிமிடத்தில் உங்கள் மகனை பிரிந்து இத்தனை நாட்கள் தேர்தல் பணிகளில் இருக்கிறீர்கள், அவர்களின் நினைவு அடிக்கடி வருகிறதா என குடும்பத்தைப் பற்றி கேட்கையில், ” இல்லாமல் இருக்காது. அவரு என்ன பண்ணு வாருன்னா.. காலை நேரங்களில் என் நெஞ்சில படுத்தே தூங்குவார். அத தவற விடுறேன். அது கஷ்டம் தான் ” என சீமான் பதில் அளித்து இருக்கிறார்.
இதற்கு பிறகு புகைப்படங்களில் ஒற்றை தேர்ந்தெடுத்து பேசும் காட்சிகள் வருகிறது. 8.45வது நிமிடத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து பேசுகிறார்.
சீமான் தன்னுடைய மகனுக்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையே வைத்துள்ளார். மேலும், சீமான் தன் மகனை பற்றி கூறிய பகுதியையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை எடுத்து பேச தொடங்கும் பகுதியையும் ஒன்றிணைத்து எடிட் செய்த வீடியோவை தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பிரபாகரன் காலை வேளைகளில் தன் நெஞ்சில் படுத்து தூங்குவார் என சீமான் கூறியது தனது மகனை பற்றி என்றும், அதை விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றி பேசும் காட்சியோடு இணைத்து எடிட் செய்து தவறாக பரப்புகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.