கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?
பரவிய செய்தி
கேமாராவை மறைக்காதேன்னு மகாராஷ்டிரா முதலமைச்சரைத் தள்ளிவிட்ட மோடி… சரியான கேமரா பைத்தியம்…
மதிப்பீடு
விளக்கம்
கடந்த டிசம்பர் 11ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.
இந்த பீடைக்கு என்னைக்கு தான் கேமரா மோகம் போகுமோ தெரியல…
கேமராவில் தெரியவேண்டும் என்று ஒரு மாநில முதல்வர்யே தள்ளிவிடும் மோடி.. @TRBRajaa @K_T_L @Tr_Gayathri pic.twitter.com/lB2KxcmOES
— ⚘️Dr Suriya⚘️ (@DrSuriya_) December 12, 2022
அப்போது ஏக்நாத் ஷிண்டே கேமராவிற்கும், மோடிக்கும் இடையில் வந்து மறைத்ததால் அவரை தள்ளிவிட்டதாக 5 வினாடி கொண்ட வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
https://twitter.com/ysathishreddy/status/1601912295772557312
அவ்வீடியோவை தெலுங்கானா ராஷ்டிர சமிதி (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியின் பொறுப்பாளர் YRS தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் மாநிலத்தின் தலைவராக இருக்கலாம். ஆனால் அவரது ஃப்ரேம் உள்ளே வந்தால் பின்னுக்குத் தள்ளப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/Theekkathir/status/1601918631327121408?t=O91YGYDxX33ePFpa1L_1sw&s=08
இதே போல, தீக்கதிர் நாளிதழின் டிவிட்டர் பக்கத்திலும், “கேமரா இருக்கு… நகருப்பா…” எனக் குறிப்பிட்டு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கேமராவை மறைப்பதாகவும், அதனை மோடி சாதுரியமாகச் சமாளிக்கும் காட்சி எனப் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி கலந்து கொண்ட வந்தே பாரத் ரயில் தொடக்க விழா குறித்து இணையத்தில் தேடினோம். நரேந்திர மோடி என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 11ன் தேதி 6 நிமிடம் கொண்ட வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், மோடி நாக்பூர் முதல் பிலாஸ்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மோடியின் இடது பக்கத்தில் ஏக்நாத் ஷிண்டே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் 4 நிமிடம் 20வது வினாடியில் வந்தே பாரத் ரயில் நடைமேடையிலிருந்து சென்று விடுகிறது. அதன் பிறகு மோடி ஏக்நாத் ஷிண்டே பக்கம் திரும்புகிறார். அங்கிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக ஏக்நாத் ஷிண்டே பின்னோக்கி செல்கிறார். அப்போது ஏக்நாத் ஷிண்டேவை தட்டி கொடுத்து மோடி கை கொடுக்கிறார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
இதே போல PMO India யூடியூப் பக்கத்திலும் 7 நிமிட வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவில் 5வது நிமிடத்தில் மேற்கண்ட நிகழ்வினை காண முடிகிறது.
நரேந்திர மோடியின் சில புகைப்படங்கள் குறித்து இதற்கு முன்னர் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : பிரதமர் மோடிக்காக 365 நாட்களும் உழைக்கும் புகைப்பட கலைஞர் எனப் பரவும் எடிட் படம் !
மேலும் படிக்க : கழிவறைக்கு உள்ளேயும் கேமராமேனை அழைத்துச் சென்றாரா பிரதமர் மோடி ?
முடிவு :
நம் தேடலில், வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கேமராவின் குறுக்கே இருந்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.