பிரதமர் மோடி ‘நமஸ்தே’ என்ற போது தமிழக மக்கள் ஆரவாரமிட்டதாக எடிட் வீடியோவை பகிரும் பாஜகவினர் !
பரவிய செய்தி
தமிழக மக்களின் ஆரவாரம்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை தொடங்கும் போது குட் ஈவினிங் சென்னை, வணக்கம், நமஸ்தே எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏனென்றால், பிரதமர் மோடி குட் ஈவினிங் சென்னை, வணக்கம் எனக் கூறும் போது ஆர்ப்பரித்த மக்களின் குரல்கள், நமஸ்தே எனக் கூறும் போது இல்லாமல் போனது என 15 நொடிகள் கொண்ட வீடியோ வைரலாகியது.
ஆனால், தமிழக பாஜகவின் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் ” தமிழக மக்களின் ஆரவாரம் ” என பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி நமஸ்தே எனக் கூறும் போதும் மக்கள் ஆர்ப்பரித்தது போன்று இடம்பெற்று உள்ளது
தமிழக மக்களின் ஆரவாரம்…#Vanakkam_Modi pic.twitter.com/4kxhqPs8nY
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) July 29, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவை முதலில் வெளியிட்டது Tamil Roasters எனும் முகநூல் பக்கம். அந்த முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவை பார்க்கையில், பிரதமர் மோடி நமஸ்தே கூறிய போது மக்கள் அமைதியாக இருப்பதை வைத்து விமர்சித்து உள்ளனர்.
இதையடுத்து, பொதிகை சேனலில் வெளியாகி உள்ள நிகழ்ச்சியின் முழுமையான வீடியோவை ஆராய்கையில், ” 1:50:14 மணி நேரத்தில் பிரதமர் மோடி குட் ஈவினிங் சென்னை, வணக்கம் எனக் கூறும் போது ஆர்ப்பரித்த மக்களின் குரல்கள், நமஸ்தே எனக் கூறும் போது மங்குவதை கேட்கலாம்.
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பதிவிட்ட வீடியோவில், பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறும் போது மக்கள் ஆர்ப்பரித்த ஒலியை நமஸ்தே எனக் கூறும் போது மீண்டும் பயன்படுத்தி எடிட் செய்து உள்ளனர். இரண்டிலும், ஆர்ப்பரித்த ஒலி முடிகையில் ஒரேமாதிரியான விசில் ஒலி கேட்கலாம்.
முடிவு :
நம் தேடலில், சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடங்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நமஸ்தே எனக் கூறும் போது மக்கள் ஆரவாரமிட்டது போல் தமிழக பாஜகவின் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.