பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் சந்திப்பு படத்தில் எடிட் செய்யப்பட்ட அகண்ட பாரதம் ஓவியம் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில், டென்மார்க் சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். மேலும், டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கெரத்தை அரண்மனையில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் ஆகிய இருவரும் சந்தித்து பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காவி நிறத்திலான அகண்ட பாரதத்தின் ஓவியம் இடம்பெற்று இருப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் பிரதமர் இல்லத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி சென்ற போது அங்கிருந்த ” ஒடிசாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களில் ஒன்றான பட்டாசித்ரா பாணி ஓவியத்தை காண்பித்ததாக ” இப்புகைப்படம் பர்ஸ்ட்போஸ்ட் இணையதளத்தில் வெளியான புகைப்பட தொகுப்பில் இடம்பெற்று இருக்கிறது.
இந்தியாவிற்கு அரசு பயணமாக வந்த போது பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்த ஓடிசா பட்டாசித்ரா ஓவியத்தை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது இல்லத்தில் வைத்துள்ளதாக இப்புகைப்படங்களை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
India’s soft power and Odisha’s treasure in the form of Pattachitra painting adorns the Denmark PM HE Frederiksen’s residence. She gave a tour of her residence to Hon. PM @narendramodi ji and showed the painting gifted by PM Modi during her last India visit. Proud moment! pic.twitter.com/bQjzwWWalM
— Dharmendra Pradhan (@dpradhanbjp) May 3, 2022
டென்மார்க் பிரதமர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஓடிசா பட்டாசித்ரா ஓவியத்தின் மீது அகண்ட பாரதத்தின் படத்தை போட்டோஷாப் செய்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்தியப் பிரதமர் மோடியும், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் பேசிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காவி நிறத்தில் அகண்ட பாரதம் ஓவியம் இருப்பதாகப் பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.