பிரதமர் மோடி அதானி மனைவியை வணங்கும் புகைப்படமா ?
பரவிய செய்தி
கௌதம் அதானி மனைவி பிரீதி அதானிக்கு கூனிக் குறுகி மரியாதை செலுத்துகிறார் நாட்டின் பிரதமர் மோடி.. கூனிக் குறுகியது நீர் மட்டுமல்ல தோழரே, ஒட்டு மொத்த இந்தியாவின் சுய கௌரவமும், தன்மானமும் தான்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலதிபர் கெளதம் அதானியின் மனைவி ப்ரீத்தி அதானி முன்பாக கைக்கூப்பி வணங்குவதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கிண்டல்களுடன் வைரலாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
ப்ரீத்தி அதானியை பிரதமர் மோடி தலைகுனிந்து வணங்குவதாக வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 ஏப்ரல் 12-ம் www.amarujala.com எனும் இணையதளத்தில் பிரதமர் மோடி தீபிகா மொண்டோல் என்பவரை வணங்கும் புகைப்படம் எனக் குறிப்பிட்டு இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
தீபிகா மொண்டோல் டெல்லியைச் சேர்ந்த திவ்யஜோதி கலாச்சார அமைப்பு மற்றும் நலன்புரி சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாடு அதிகாரி மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், திரைப்பட நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் வித்யா பாலன் போன்ற முக்கிய நபர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கிடைத்துள்ளன.
2018-ம் ஆண்டு தீபிகா மொண்டோல் அளித்த பேட்டி ஒன்றின் போது, அவர் பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக காண்பிக்கப்பட்டு உள்ளன. அதில், 2.50வது நிமிடத்தில் பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : அதானி மனைவியின் முன் தலைகுனிந்தாரா மோடி ?
இதற்கு முன்பாக, பிரதமர் மோடி அதானி மனைவி முன்பாக தலைகுனிந்து வணக்கம் தெரிவித்ததாக தும்கூர் மேயரின் புகைப்படம் தவறாக வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி தொழிலதிபர் கெளதம் அதானியின் மனைவி ப்ரீத்தி அதானியிடம் தலைகுனிந்து வணங்கியதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது. அப்புகைப்படத்தில் இருப்பவர் அதானியின் மனைவி அல்ல என அறிய முடிகிறது.