கொரோனா பாதித்தவர்களை நாய் போல் பிடிப்பதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?
பரவிய செய்தி
நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள் கொரோன நோய் பாதிக்கப்பட்டவரை சீனாவில் பாருங்க
மதிப்பீடு
விளக்கம்
Ksm Bukari எனும் முகநூல் பக்கத்தில், சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என சோதித்த பிறகு அவர்களை நாயைப் போல் பிடித்து செல்கிறார்கள் என கீழ்காணும் வீடியோ பதிவிடப்பட்டது. தற்பொழுது இந்த வீடியோ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
வைரல் செய்யப்படும் 2.17 நிமிட வீடியோவில், ” சோதனைக்காக காத்திருக்கும் காவல்துறையினர் காரில் வரும் நபரை சோதிக்கிறார்கள். அவருக்கு வைரஸ் இருப்பதாக தெரிந்த உடன் அவரை கீழே இறங்க எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால், அவர் அதனை கண்டுகொள்ளாமல் காரை இயக்கும் பொழுது வழிமறிக்கப்படுகிறார். பிறகு காரை விட்டு இறங்கும் நபர் பேசுக்கொண்டிருக்கையில் பின்னால் இருந்து வருவார்கள் அந்த நபருக்கு முகமூடி அணிவித்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார்கள். அதன் பிறகு அங்கிருப்பவர்கள் மீது மருந்து ஒன்று ஸ்ப்ரே மூலம் அடிக்கப்படுகிறது “.
உண்மை என்ன ?
சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை மோசமாக பிடித்து செல்வதாக வைரல் செய்யப்படும் வீடியோ பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. வீடியோவில் இடம்பெற்ற காவலர்கள் வழிமுறைகள் கூற கூற ஒவ்வொன்றையும் செய்வது போல் இருக்கிறது. ஆக, இது வைரஸ் குறித்த பயிற்சி வீடியோவாக இருக்கும் எனத் தோன்றியது.
இதையடுத்து வீடியோ குறித்து ஆராய்கையில், பிப்ரவரி 23-ம் தேதி Daily media news என்ற யூடியூப் சேனலில் ” EXERCISE ARRESTED PEOPLE OF EFFECTIVE CORONA VIRUS IN CHINA ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
வைரல் வீடியோவின் 1.22 மற்றும் 1.56 நிமிடத்தில் காவலர்கள் ” Exercise ” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது. அந்த வீடியோவில் காரில் வந்த நபரின் செயலையும் பார்க்கையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக நடந்து கொண்டால் எப்படி சமாளிப்பது என்பது போன்ற பயிற்சியை மேற்கொண்டது போல வீடியோவில் பதிவாகி இருக்கிறது. எனினும், இந்த வீடியோ எங்கே, எப்பொழுது எடுக்கப்பட்டது என விவரங்கள் கிடைக்கவில்லை.
இதுவரை 79,000-க்கும் மேற்பட்டவர்கள் நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இறப்பு எண்ணிக்கை 2,600-ஐ தாண்டி உள்ளது. பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் இறப்புகள் நிகழ்ந்து வருகின்றன. தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எச்சரிக்கை அளவு உயர்ந்து உள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில் இருந்து, சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நாய் போல் பிடித்து செல்வதாக வைரல் செய்யப்படும் வீடியோ வைரஸ் தொடர்பாக நடத்தப்பட்ட முன்மாதிரி பயிற்சி வீடியோ என அறிந்து கொள்ள முடிகிறது.