போராடும் முஸ்லீம்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவா ?
பரவிய செய்தி
அமைதியாக போராடும் முஸ்லிம்களை கொஞ்சமும் தயக்கமில்லாமல் சுட்டு கொல்லும் பாசிச அடிமை காவல்.
மதிப்பீடு
விளக்கம்
மக்களுக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை ஸ்ட்ரக்சரில் எடுத்துச் செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோவை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்ததாக தமிழில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Poornima Mythreyan என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, ” 2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் ” Moke Dreal of khunti police ” என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருந்ததை காண முடிந்தது.
குந்தி போலீஸ் எனக் குறிப்பிட்டு இருப்பது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தைக் குறிக்கிறது. 2017-ல் குந்தி மாவட்ட போலீசார் நடத்திய தாக்குதல் முன்மாதிரி பயிற்சி குறித்த வீடியோவை தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ஆந்திராவில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் தாக்குதலா ?
இதேபோல், ஜனவரி 2019-ல் ஆந்திரா பகுதியில் தீவிரவாதிகள் மீது கமாண்டோக்கள் தாக்குதல்களை நடத்தி கைது செய்ததாக தவறான செய்தி வைரலாகியது. ஆனால், அந்த சம்பவமும் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட முன்மாதிரி பயிற்சி என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை எனக் கூறி விட முடியாது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்து உள்ளதாக பிபிசி தொடர்ந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இந்த வீடியோ தவறானவை.