புதுச்சேரியில் சிறுவன் பாதாளச் சாக்கடையில் விழுந்ததைத் தமிழ்நாடு எனப் பரப்பப்படும் தவறான தகவல் !
பரவிய செய்தி
திராவிட மாடல் ஆட்சியில. சாக்கு போட்டு மூடி இருந்த பாதாள சாக்கடை தொட்டியில் விழுந்த பள்ளி மாணவன். Archive link
மதிப்பீடு
விளக்கம்
கோணிப்பை கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்த பாதாளச் சாக்கடையில் பள்ளிச் சிறுவன் விழுவது மற்றும் காப்பாற்றப்பட்டது பற்றி பாலிமரில் வெளியான ஒரு வீடியோவை தமிழ்நாடு எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில் ‘திராவிட மாடல் ஆட்சியில் கொடுமை’ என்று குறிப்பிடுகின்றனர்.
அந்த குழந்தையின் சாதுர்யத்தால் உயிர் பிழைத்துக் கொண்டது..
திராவிட மாடல் ஆட்சியில் என்ன கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ. @CMOTamilnadu @mkstalin @DMKITwing @arivalayam @Udhaystalin @Peruvazhuthiyar @U2Brutus_off @rajiv_dmk @TRBRajaa @Makizh_nan @Senthilvel79 https://t.co/Xum95bhCtR
— இன்பன்ட் பால் (@InfantPaul_Leon) December 20, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய பாலிமர் வீடியோவில் ‘புதுச்சேரி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக கூட்டணிக் கட்சியான அகில இந்திய என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார்.
இந்த சம்பவம் புதுச்சேரியில் எந்த பகுதியில் நடந்தது எனப் பரவக் கூடிய பாலிமர் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து மேற்கொண்டு தேடியதில் ‘தினமலர்’ இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது.
அதில், ‘புதுச்சேரி பாரதி வீதி, பாதர் சாஹிப் வீதி சந்திப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உப்பளம் என்னும் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். அத்தொகுதிக்கு திமுக-வை சேர்ந்த அனிபால் கென்னடி என்பவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மேலும் இது தொடர்பாக சமயம், நியூஸ் 18 தமிழ்நாடு தளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. பாதாளச் சாக்கடை மூடியைச் சரி செய்ய வந்த அனிபால் கென்னடிக்கும் அதிமுக மாநிலச் செயலாளரும் அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்த இச்சம்பவத்தைத் தமிழ்நாடு எனத் தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
மூடப்படாத பாதாளச் சாக்கடையில் சிறுவன் விழுந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்தது. அங்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனைத் தமிழ்நாடு எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.