குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வணக்கம் சொல்லும்போது பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை எனப் பரவும் தவறான தகவல் !
பரவிய செய்தி
பதவி படுத்தும் பாடு கூழை கும்பிடு
மதிப்பீடு
விளக்கம்
இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரிசையாக நின்று வணக்கம் தெரிவிப்பதாகவும், அதனை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
ஜனாதிபதியை பார்த்து பிரதமர் கும்பிடுவதுதான் மரபு…
இவிங்கதான் எல்லா மரபுகளையும் கால்ல போட்டு மிதிக்கற கும்பலாச்சே https://t.co/DOLS59kS2H
— ரௌத்திரம் பழகு (@rowthranath) December 7, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தொடர்பான முழு வீடியோ ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் பக்கத்தில் உள்ளதைக் காண முடிந்தது.
டாக்டர்.அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த படத்துக்குத் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தியதும் ஊடகங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக மோடி, திரெளபதி முர்மு உட்பட அனைவரும் வரிசையாக நின்றுள்ளனர். புகைப்படம் எடுத்ததும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பிரதமர் மோடி கைகளைக் கூப்பி நன்றி கூறுகிறார். அவரை தொடர்ந்து மற்ற தலைவர்களும் அவ்வாறு நன்றி தெரிவிக்கின்றனர்.
பின்னர் மோடி கைகளை இறக்கிவிட்டுத் திரும்புகிறார். அப்படி மோடி திரும்பும்போது எடுக்கப்பட்ட படத்தினைதான் தவறாகப் பரப்புகின்றனர். மேற்கண்ட இந்நிகழ்வு ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் பக்கத்தில் உள்ள வீடியோவில் (09:36) காண முடிகிறது.
மேலும் அந்நிகழ்ச்சிக்கு முன்னதாக வருகை தந்த மோடி குடியரசுத் தலைவரின் வருகைக்குக் காத்திருப்பதும், குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்பதையும் வீடியோவின் தொடக்கத்தில் பார்க்க முடிகிறது.
முடிவு :
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் மோடிக்கு வணக்கம் சொல்லும்போது அதனை அவர் கண்டு கொள்ளவில்லை எனப் பரவக் கூடிய புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. மோடி ஊடகங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும் போது எடுத்த படத்தினை தவறாகப் பரப்புகின்றனர்.