ஹத்ராஸ் பெண் வீட்டில் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறியது நக்சல் பெண்ணிற்கா ?
பரவிய செய்தி
அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும். எல்லா டிவி சேனல்களிலும் பொய்களை பரப்பி பேட்டி கொடுத்ததும் அவர்தான் என்பதும் அம்பலம். தற்போது அவர் கைதுக்கு பயந்து தலைமறைவு. இத்துடன் ஹர்தாஸ் சம்பவம் குறித்து போராளிகள் மறந்துவிட்டு அடுத்த பிண அரசியல் செய்யும் சந்தர்ப்பம் நோக்கி காத்திருப்பார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
ஹத்ராஸ் இளம்பெண் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அங்கு கட்டி ஆறுதல் கூறியது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த நக்சல் என பிரியங்கா காந்தி ஒரு பெண்ணை கட்டி ஆறுதல் தெரிவிக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
2020 அக்டோபர் 4-ம் தேதி வெளியான ABPlive எனும் செய்தி இணையதளத்தில் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் இளம்பெண் வீட்டில் ஒருவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படத்தை வெளியிட்டு கீழே, துக்கமடைந்த குடும்பத்திரை பிரியங்கா காந்தி கட்டிப்பிடித்து அவர்களுக்கு உணர்ச்சி மற்றும் தார்மீக ஆதரவை வழங்கினார் ” எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
” பிரியங்கா காந்தி கட்டிப்பிடித்து இருப்பது வேறு யாரும் இல்லை என்னுடைய அம்மா தான். இந்த புகைப்படம் குறித்து பல வதந்திகள் உள்ளன, அவை உண்மை இல்லை. நக்சல் பாபி என அழைக்கப்படும் பெண் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரை சேர்ந்த மருத்துவர். சம்பவம் குறித்து அறிந்து எங்கள் வீட்டிற்கு அக்டோபர் 4-ம் தேதி வந்தார் மற்றும் ஜபல்பூர் செல்வதற்கு முன்பாக எங்கள் வீட்டில் தங்கி இருந்தார் ” என இறந்த பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் பூம்லைப் இணையதளத்திற்கு தெரிவித்து உள்ளார். (வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை நக்சல் பாபி என ஹிந்தியில் பரப்பி வருகிறார்கள்)
ஹத்ராஸ் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஜபல்பூர் பெண்ணான ராஜ்குமாரி பன்சாலை ” நக்சல்” , “நக்சல் பாபி ” என சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். வலதுசாரி ஆதரவு இணையதளமான opindia, ஜபல்பூர் பெண் உடைய பின்புலத்தை அறியாமலேயே நக்சல் என குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டு உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் பரப்பி வருகிறார்கள்.
இணையத்தில் தன்னை நக்சல் எனக் குறிப்பிட்டு பேசப்படுவதை அறிந்து ராஜ்குமாரி பன்சால் ஹத்ராஸ் பெண் வீட்டிற்கு சென்றது குறித்து ஊடகங்களுக்கு விளக்கி உள்ளார். அக்டோபர் 11-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில்,
” சில ஊடகங்களால் ” நக்சலைட் ” என்றும், ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் ” உறவினராக காட்டிக்கொண்டார் ” என்றும் குற்றம்சாட்டப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த 40 வயதான தடயவியல் நிபுணர் ஒருபோதும் தனது அடையாளத்தை மறைக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஜபல்பூரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான டாக்டர் ராஜ்குமாரி பன்சால் ஹத்ராஸ் குடும்பத்தினரை நேரில் பாத்து ஆதரவு தெரிவிப்பதற்காக தனது 10 வயது மகன் மற்றும் கணவரை விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார்.
மேலும், அக்டோபர் 3-ம் தேதி புறப்பட்டு அடுத்தநாள் மதியம் ஹத்ராஸ் குடும்பத்தினரை காணச் சென்றேன். அக்டோபர் 5-ம் தேதி ஜபல்பூருக்கு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்தேன், ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். பின்னர், அக்டோபர் 6-ம் தேதி என்னுடைய ஊருக்கு திரும்பச் சென்றேன் ” என பன்சால் கூறியதாக இடம்பெற்று உள்ளது.
தனது தொலைபேசி கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக சைபர் செல்லிற்கு புகார் அளித்துள்ளார் மற்றும் ” நக்சல்” தொடர்பு என வதந்தி பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பன்சால் கூறியுள்ளார்.
மேற்காணும் வீடியோவில், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் காட்சியை காணலாம். ராஜ்குமாரி பன்சால் ஹத்ராஸ் பெண் வீட்டிற்கு சென்றது அக்டோபர் 4-ம் தேதி எனக் கூறுகிறார், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்றது அக்டோபர் 3-ம் தேதி என ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. பிரியங்கா காந்தி கட்டிப்பிடித்தது தன்னுடைய அம்மா என்ன இறந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்து இருக்கிறார். நக்சல் என தன் மீது வதந்தியைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராஜ்குமாரி பன்சால் தெரிவித்து உள்ளார்.
முடிவு :
நம் தேடலில், பிரியங்கா கட்டி ஆறுதல் சொன்னது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த நக்சல் என பரப்புவது வதந்தியே என்று அறிந்து முடிகிறது.