உடைகளின் மேலே கை, கண்ணில் கட்டினைக் கட்டிக் கொண்டு போராடுவது ஏன் ?
பரவிய செய்தி
அடேய் போராளிகளா.. உங்க பித்தலாட்ட போராட்டத்தே பித்தலாட்டம்னு யாரும் நிருபிக்க வேண்டாம்டா நீங்களே அதே நிரூபிச்சீட்டீங்க. புர்காவோட மண்டையிலே கட்டு போட்ட அந்த டாக்டர் யாருடா?
மதிப்பீடு
விளக்கம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் கண்ணில், உடலில் காயங்கள் ஏற்பட்டது போல் கட்டுடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பகிர்ந்து, உங்களுக்கு எல்லாம் கட்டுப் போட்ட டாக்டர் யார்? , எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு என பல கிண்டல் மீம்ஸ்கள் தமிழில் முகநூலில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் மேலே கண்ணில், கையில் கட்டினை கட்டி இருக்கும் பெண்களின் புகைப்படங்களும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒருவர் அல்ல இருவர் அல்ல, போராட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் என பலரும் இதேபோல் ஒற்றைக் கண்ணில் மற்றும் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இருப்பவர்கள் கண்ணில், கைகளில் அடிபட்டது போன்று கட்டினை கட்டிக் கொண்டு ஏமாற்றி போராட்டத்தினை மேற்கொள்ளவில்லை. அப்புகைப்படங்கள் குறித்து தேடிய பொழுது, ஒரிசாபோஸ்ட் என்ற இணையதளத்தில் ” One eye ‘bandaged’, Jamia Millia Islamia students continue protests ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் ஜாமியா மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்வதாக இப்புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 15-ம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவலர்கள் நடத்திய தாக்குதலில் ஜாமியா மாணவர் மிகாஜூதீன் தன்னுடைய ஒற்றைக் கண்ணை இழந்தார். அவரை நினைவுப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் ஒரு கண்ணில் மட்டும் அடிபட்டது போல் கட்டினை கட்டி பங்கேற்று உள்ளனர்.
NDTV-யில் வெளியான செய்தியில், ” ஒரு கண்ணை மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கும் நடவடிக்கை ஆனது ஒற்றைக் கண்ணை இழந்த முகமது மிகாஜூதீன் உடன் ஒற்றுமைப்படுத்தி இருப்பதாக போராட்டக்காரர் அஸ்லம் கூறியுள்ளார். ஆனால், பொறுப்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் வளாகத்தில் நாசத்தை ஏற்படுத்திய படைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.
Eye bandaged : Jamia students bandage one eye in solidarity with fellow student Minhajuddin who lost an eye in @DelhiPolice crackdown on December 15. Innovative way of protest.#CAA_NRC_NPR #CAAProtest #JamiaWalaBagh #JamiaMilliaIslamia pic.twitter.com/AzRO5roHjR
— Zafar Abbas (@zafarabbaszaidi) December 29, 2019
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிராக போராடும் மக்களை போலியாக அடிபட்டது போன்று கண்ணில், கையில் கட்டினைக் கட்டி போராடுவதாக வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.
ஒற்றைக் கண்ணை இழந்த ஜாமியா மாணவரின் தோற்றத்தை காண்பிக்கும் வகையில் பலரும் ஒற்றைக் கண்ணில் கட்டினைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.