“பப்ஜி” விளையாட்டிற்கு பரிசு வழங்கியது தவறு தான்-எம்.பி வசந்தகுமார் பதில் !
பரவிய செய்தி
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி ஆன்லைன் மூலம் மாநில அளவிலான பப்ஜி விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.வசந்தகுமார் பரிசு வழங்கினார்.
மதிப்பீடு
விளக்கம்
ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி பிறந்தநாளன்று மாநில அளவில் நடத்தப்பட்ட பப்ஜி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் பரிசுகளை வழங்கியதாக மேற்காணும் செய்தித்தாள் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எம்.பி வசந்தகுமார் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை தேடிப் பார்த்த போது எந்தவொரு பதிவுகளும் கிடைக்கவில்லை. இதையடுத்து எம்.பி வசந்தகுமார் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது, ” அது எனக்கு தெரியாமல் நடந்துள்ளது. அது தப்புதான்..தப்புதான்..தப்புதான். அப்போது மொத்தமாக மேனஜர் கையில் எடுத்துக் கொடுத்ததால் கொடுத்து விட்டேன். நானே பப்ஜி விளையாடுவதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் 3 முறை பேசியுள்ளேன். பரிசு ஏதும் வழங்கவில்லை, சான்றிதழ் தான் தரப்பட்டது . மேனேஜர் கொடுத்தார் என கவனிக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன். பரிசுகள் கொடுக்கவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள், தற்போது தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலிகள் போன்றவற்றில் மக்கள் பலரும் மூழ்கி உள்ளனர் என்பதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற விளையாட்டுகள், செயலிகளை பயன்படுத்துபவர்களை பிரபலப்படுத்துவது அதனை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.
எம்பி வசந்தகுமார் பப்ஜி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் என்கிற செய்தியை பகிர்பவர்கள் நாமும் விளையாடாமல் போய்விட்டோமே என்றே பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், பப்ஜி விளையாட்டிற்கு சான்றிதழ் வழங்கியது தவறு என எம்.பி வசந்தகுமார் ஏற்றுக்கொண்டுள்ளார்.