This article is from Oct 07, 2020

பஞ்சாபில் பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலையா ?

பரவிய செய்தி

பஞ்சாப் போலீஸ் நோமி (கிறிஸ்தவ பெண்) அமிர்தசரஸில் கற்பழித்து கொலை. அந்த இந்திய செய்தித்தாள் கேட்க வருத்தமாக இருக்கிறது, பத்திரிகையாளர், சோஷியல் மீடியா இந்த #JusticeforNomi நியாயத்தில் அமைதியாக இருக்கிறது. ஆதாரம்: லியாங்மாய் போஸ்ட்

மதிப்பீடு

விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் நோமி எனும் பெண் போலீஸ் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு உள்ளதாக காவலர் உடையில் இருக்கும் இறந்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டை உள்ளிட்ட புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

” Punjab Police @Nomi (Christian Girl) Rape & Murdered in Amritsar. Sad to hear that Indian Newspaper, Journalist, Social Media are silent on this #JusticeforNomi ” என ஆங்கிலத்தில் வெளியான பதிவை தமிழில் மொழிமாற்றம் செய்து பகிர்ந்து வருகிறார்கள். பஞ்சாப் பெண் போலீஸ் கொலை குறித்து ஊடகங்கள் யாரும் பேசவில்லை என பகிரப்படும் புகைப்படத்துடன் கூடிய தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
பஞ்சாபில் பெண் போலீஸ் நோமியின் இறப்பு குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகி இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கையில், ” சங்கத்புரா கிராமத்திற்கு அருகே வேகமாக சென்ற எஸ்யூவி வாகனம் இடித்ததில் ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் நோமி உயிரிழந்ததாக ” 2020 அக்டோபர் 2-ம் தேதி tribuneindia இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
எஸ்ஏடி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாடலின் வருகையை கருத்தில் கொண்டு கோல்டன் கோயில் அருகே தனது பணிக்காக சென்று கொண்டிருந்தார். ஷக்னா டி வெஹ்ராவின் அருகே சென்ற போது வேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி வாகனம் அவரது ஸ்கூட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் காவலர் உயிரிழந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

உடற்கூறாய்வு பணிகள் முடிந்த பிறகு பெண் காவலரின் உடலானது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றதாக அக்டோபர் 1-ம் தேதி  bhaskar.com இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் பிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கு காரணமான நபர் தலைமறைவாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பெண் காவலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததாக புகைப்படத்துடன் பகிரப்படும் தகவல் முற்றிலும் தவறானது. பெண் காவலர் நோமியின் ஸ்கூட்டரில் வேகமாக சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader