இறந்த வீரர்களின் சவப்பெட்டிகள் என பரவும் படங்கள் உண்மையா?

பரவிய செய்தி
புல்வாமா தாக்குதலில் இறந்த இந்திய வீரர்களின் தேசியக் கோடி அணிவிக்கப்பட்ட சவப்பெட்டிகள். அதனை பார்த்து கண்ணீர் வடிக்கும் இந்திய வீரர்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் சவப்பெட்டிகள் என பரவும் புகைப்படங்கள் 2017-ல் சத்தீஸ்கரில் இறந்த 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது.
இரண்டாவது புகைப்படம் 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. விரிவாக படிக்கவும்.
விளக்கம்
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சமூக வலைதளங்களில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்பான படங்கள், வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகிறது. இதில், பெரும்பாலானவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பகிரப்பட்டவை. தவறான பதிவுகள் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் கூட அதிகாரப்பூர்வ பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தது.
அவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டு பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்று இறந்த சி.ஆர்.பி.எஃப் உடல் இருக்கும் சவப்பெட்டிகள் மற்றும் இந்திய வீரர்கள் கண்ணீரை துடைப்பதாகக் கூறும் படம்.
“ Cost of freedom and pain of loosing brothers “ என்ற வாசகத்துடன் இவ்விரு படங்களையும் இந்திய மேஜர் சுரேந்திர பூனியா தன் ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 15-ம் தேதி பதிவிட்டு இருந்தார். இந்திய அளவில் இப்படங்கள் வைரலாகியவை.
உண்மையில், புல்வாமா தாக்குதலுக்கும், இவ்விரு படங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. தவறாக புரிந்து கொண்டு புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்கள் என பதிவிட்டு வருகின்றனர்
முதல் படம் :
2017-ல் ஏப்ரல் மாதத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.
சாலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கிட்டத்தட்ட 90 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 25 பேர் இறந்தனர், நக்ஸ்லைட்டுகளும் கொல்லப்பட்டனர்.
சுக்மா பகுதியில் இறந்த 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு தேசியக்கொடி அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இரண்டாவது படம் :
இந்திய வீரர்கள் கண்ணீரை துடைப்பதாக உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்ற புகைப்படம் முதன் முதலில் “ The Seattle Times “ என்ற இணையதளத்தில் 2011-ல் உபயோகிக்கப்பட்டுள்ளது.
கார்கில் போரில் இந்தியா வென்று 12 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவு கூறும் விதமாக 2011 ஜூலை 26-ம் தேதி டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு இந்திய வீரர்கள் தங்கள் முகத்தில் இருந்த வியர்வையை துடைக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இதே படம் 2016 URI தாக்குதலுக்கு பிறகும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி கேமராவிற்கு மரியாதை :
இறந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியைப் பார்த்து ராகுல் காந்தி வணங்குகிறார், ஆனால் பிரதமர் மோடியோ கேமராவை பார்த்து வணங்குகிறார் என ட்விட்டரில் இவ்விரு படங்களும் தவறாக பதிவிட்டு உள்ளனர்.
செய்தி : FAKE
இந்திய வீரர்களின் உடல்களுக்கு முன் மௌன அஞ்சலி செலுத்திய பின் அங்கிருந்த சவப்பெட்டிகள் அனைத்திற்கும் அருகில் பிரதமர் மோடி சென்று வணங்கிய போது எடுக்கப்பட்ட படங்களை தவறாக சித்தரித்து உள்ளனர். வீடியோவை முழுவதுமாக கவனித்தால் புரியும்.